2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நடிகை அஞ்சலி தேவி காலமானார்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 13 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி தனது 86ஆவது வயதில் சென்னையில் இன்று (13) காலமானார். கடந்த ஒருவாரமாக உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.

ஆந்திராவில் பிறந்த இவர்,  கணவனே கண்கன்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகியோருடன் ஜோடியாக நடித்தவர் அஞ்சலிதேவி.  அஞ்சலிதேவியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம்.

அவருக்கு 5 வயது ஆனபோது, குடும்பம் காக்கிநாடாவில், குடியேறியது. பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு நடைபெற்ற நாடகங்களில் பங்குகொண்டார். காக்கிநாடாவில், இசை அமைப்பாளராகவும், நடன இயக்குனராகவும் இருந்த ஆதிநாராயணராவ் என்ற இளைஞர், இவரது நடன நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவியின் அழகும் நடனமும், அவரைக் கவர்ந்தன. தன் நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.

அஞ்சலிதேவி நடித்த 'தெருப்பாடகன்', 'லோபி' ஆகிய நாடகங்கள், ரசிகர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றன. இந்த நிலையில், அஞ்சலிதேவிக்கும், ஆதிநாராயணராவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

1945ஆம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் சி.புல்லய்யா, 'தெருப்பாடகன்' நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவி சிறப்பாக நடனம் ஆடியதை பார்த்து மகிழ்ந்து, தன்னுடைய 'கொல்லபாமா' என்ற தெலுங்கு திரைப்படத்தில் மோகினி வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் ஆந்திராவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வெளியாகி வெற்றிவாகை சூடியது. அதனால் அஞ்சலிதேவிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தெலுங்கில், ஏ.நாகேஸ்வரராவுடன் அஞ்சலிதேவி நடித்த 'தீலுகுர்ரம்' என்ற படம், 'மாயக்குதிரை' என்ற பெயரில் தமிழில் 'டப்' செய்யப்பட்டு திரையிடப்பட்டது. மாயா ஜாலங்கள் நிறைந்த இந்தப் படம், ஓகோ என்று ஓடியது. அஞ்சலிதேவி தமிழ்நாட்டிலும் புகழ் பெற்றார். தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்தன. 'மகாத்மா உதங்கர்' என்ற தமிழ்ப் படத்தில் நடித்தார். 1949-ல் நடிக மன்னன் பி.ஐ.சின்னப்பாவுடன் 'மங்கையர்க்கரசி' என்ற படத்தில் நடித்தார். 1949-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'மாயாவதி' என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து நடித்தார்.

1954இல் ஏவி.எம். தயாரிப்பான பெண் படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா ஆகியோருடன் இணைந்து நடித்தார். தமிழ்ப்படங்களில், அவர் சொந்தக்குரலில் பேசி நடித்தது குறிப்பிடத்தக்கது. 1955இல் நாராயணன் கம்பெனி தயாரித்த 'கணவனே கண்கண்ட தெய்வம்' என்ற மெகாஹிட் படத்தில், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில், அஞ்சலிதேவியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. இந்தப்படம், அவர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் ஏற்கவே பிரபலமாகியிருந்தவர், தமிழ்ப்பட உலகிலும் பானுமதி, பத்மினி வரிசையில் இடம் பெற்றார். ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தார். சிவாஜியுடன் 'முதல் தேதி', 'நான் சொல்லும் ரகசியம்' படங்களிலும், எம்.ஜி.ஆருடன் 'சக்ரவர்த்தி திருமகள்', 'மன்னாதி மன்னன்' ஆகிய படங்களிலும் நடித்தார். ஜெமினி கணேசனுடன் இவர் நடித்த 'காலம் மாறிப்போச்சு' சிறந்த படம் என்ற பெயருடன் வசூலையும் குவித்தது. மற்றும் 'இல்லறமே நல்லறம்', 'பூலோக ரம்பை', 'வீரக்கனல்' முதலான படங்களில் ஜெமினிகணேசனுடன் நடித்தார்.

தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார். அஞ்சலிதேவி, சொந்தப்படங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் 'மணாளனே மங்கையின் பாக்கியம்' படத்திலும், நாகேஸ்வரராவுடன் 'அனார்கலி'யிலும் நடித்தார். இந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், மிகவும் பிரபலமாயின. இசை அமைத்தவர் அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ்.

அஞ்சலிதேவி தயாரித்த மற்றொரு படம் 'அடுத்த வீட்டுப் பெண்'. இது நகைச்சுவைப் படம். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன். தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது 'லவகுசா'. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. ராமராவ் ராமராகவும், அஞ்சலிதேவி சீதையாகவும் அற்புதமாக நடித்தனர். பிற்காலத்தில், அண்ணி, அம்மா வேடங்களிலும் அஞ்சலிதேவி நடித்தார்.

ஸ்ரீதர் தயாரித்த 'உரிமைக்குரல்' படத்தில், எம்.ஜி.ஆருக்கு அண்ணியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. 'அன்னை ஓர் ஆலயம்' படத்தில், ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் அஞ்சலிதேவி நடித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X