2025 மே 19, திங்கட்கிழமை

லோகேஸ்வரனுக்கு 29வரை விளக்கமறியல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 25 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு -  தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை காணி அபகரிப்பு குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது கைது செய்யப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டார்.

மலையைச் சூழவுள்ள 632ஏக்கர் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்படுகின்றமை மற்றும், குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த கட்டுமானங்கள் இடம்பெறுகின்றமை என்பவற்றைக் கண்டித்து கடந்த 21ஆம் திகதி குருந்தூர்மலையில் தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை மக்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில்  நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில், சனிக்கிழமை (24) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தொடர்பாக ஓர் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இந் நிலையில் அவ்வாறு அடையாள அணிவகுப்புச்செய்வதற்கான தேவையில்லை எனவும்,  அவர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை தொடர்பிலான ஆவணங்களை ஏற்கனவே நீதிமன்றுக்கு சமப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, லோகேஸ்வரனுக்குப் பிணை வழங்கப்படவேண்டும் என அவர்சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் வாதம் செய்திருந்தனர்.

எனினும் அடையாள அணி வகுப்பை பொலிஸார் கோருகின்றபோது குற்றவியல் நடபடிமுறைச் சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையிலே கட்டாயமாக அடையாள அணிவகுப்புச் செய்யப்படவேண்டும் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், வியாழக்கிழமை (29) வரை, விளக்கமறியலில் வைக்குமாறும் அதன்பின்னர் அடையாள அணிவகுப்பை நடத்துமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.

இந்தவழக்கில் சின்னராசா லோகேஸ்வரன் சார்பில் சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராசா ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X