2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வட்டுக்கோட்டையில் வசதிகளைக் கோரி கவனயீர்ப்பு

Editorial   / 2026 மார்ச் 22 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பு. கஜிந்தன்

யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தக் கோரி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (22) வைத்தியசாலைக்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், வைத்தியசாலைப் பயனாளிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வைத்தியசாலையில் போதிய கட்டட வசதிகள் இருந்தபோதிலும், இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையில் உள்ளனர். அத்துடன், ஒரு செவிலியர் (தாதியர்) கூட இதுவரை நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் 24 மணிநேரச் சேவையும், நோயாளர் விடுதிச் சேவைகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டி (Ambulance), காரைநகர் வைத்தியசாலைக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்:

"வட்டுக்கோட்டை வைத்தியசாலையைத் தரம் உயர்த்துங்கள்!" "விடுதி வசதியுடன் கூடிய வைத்தியசாலையாக இதனைச் செயற்படுத்துங்கள்!" "மக்களின் ஆரோக்கியம் எமது உரிமை – சுகாதாரச் சேவை அரசின் கடமை!" "நோயாளிகளின் உயிர் முக்கியம் – வட்டுக்கோட்டை வைத்தியசாலையைப் புறக்கணிக்காதே!" "இடைநிறுத்தப்பட்ட கட்டட வேலைகளுக்கு உடனடியாக நிதியை ஒதுக்கு!"

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குச் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும், மக்களின் அடிப்படைச் சுகாதார உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .