Super User / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
சுனாமி அனர்த்தத்திற்கு முன்னர் கல்முனை மாநகர சபையின் உப நூலகம் ஒன்று கல்முனைக்குடி பிரதேசத்தின் சாஹிபு வீதியில் அமைந்திருந்தது.
15 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த கல்முனைக்குடி பிரதேசத்தில் வாழும் சுமார் 5,900 குடும்பங்களின் வாசிப்பு மற்றும் அறிவுத் திறன் விருத்திக்காக இந்நூலகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அத்துடன் இப்பிரதேசத்தில் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகியவற்றில் கல்வி கற்கும் வறிய மாணவர்கள், தமது மேலதிக கற்றல் தேவைகளை இந்நூலகத்தின் ஊடாகவே பூர்த்தி செய்து வந்தனர்.
எனினும், துரஷ்டவசமாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால், இந்நூலகம் முற்றாக சேதமடைந்தது.
அதன் பின்னர், இப்பிரதேசத்தில் உள்ள ஏனைய அலுவலகங்களும் குடியிருப்புக்களும் அர, அரசசார்பற்ற நிறுவனங்களினால் மீளமைக்கப்பட்ட போதும் இந்நூலகம் இன்னும் மீளமைக்கப்படவில்லை.
எனினும் இதற்கு பொறுப்பான கல்முனை மாநகர சபையினால் 2007ஆம் ஆண்டு, நூலகம் சேதமடைந்த அதே இடத்தில் நூலகக் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 3 வருடங்கள் கழிந்தும் இந்தக் கட்டிடம் அரை குறையாக கைவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்முனை மாநகர பிரதி மேயர் எ. எம். வசீரிடம் வினவிய போது,
கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மாநகர சபை உறுப்பினர் எம். எஸ். எம்.நிஸார் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரிடமே இது தொடர்பாக கேட்டறிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸாரிடம் இது பற்றிக் கேட்ட போது,
மாநகர சபை அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒன்றான “நெல்சிப்” வேலைத்திட்டத்தின் 2ஆம் கட்டத்தில் இந்த நூலகத்தின் மீதி நிர்மாண வேலைகளுக்காக 18 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம். “நெல்சிப்” வேலைத்திட்டம் 2011ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
2011ஆம் ஆண்டளவில் இந்த நூலக நிர்மான வேலைகள் பூர்த்தியடையலாம். ஆனால் எமது பிள்ளைகளின் கற்றல் மற்றும் அறிவு விருத்திக்கு தற்காலிக கட்டிடத்திலாவது இந்நூலகத்தை அமைத்துத் தர வேண்டும் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026