2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிரியாவின் இட்லிப்: வரலாற்றின் முடிவு?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட யுத்தமொன்று, அதன் கடைசிக் கட்டத்தை அடைந்திருக்கிறது.   
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டு, இலட்சக் கணக்கானோர்  இடம்பெயரக் காரணமான யுத்தத்தின் முடிவு நெருங்குகிறது.   

இந்த யுத்தத்தை யார் முன்னெடுத்தார்களோ, யார் தொடக்கினார்களோ, நடைபெற்ற அனைத்து அவலத்துக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் யாரோ, அவர்கள் இன்று அமைதி பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் பெண்கள், குழந்தைகள் பற்றியும் பேசுகிறார்கள்.   

உலகம் மாறிவிட்டது; அமெரிக்கா தொடக்கிய போரில், அது, அவமானகரமான தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது கெடுபிடிப்போருக்குப் பின்னரான உலக ஒழுங்கில், அமெரிக்கா நேரடியாகச் சந்திக்கும் மிகப்பெரிய தோல்வி ஆகும்.   

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியில், வியட்நாம் போருக்குப் பிறகு, அமெரிக்கா சந்தித்துள்ள மிகப் பெரிய பின்னடைவும் தோல்வியும் சிரியாவிலேயே நடந்தேறியுள்ளது.   

பெர்லின் சுவரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியத்தின் உடைவை ‘வரலாற்றின் முடிவு’ என பிரான்ஸிஸ் புக்குயாமா அழைத்தார். அச்சொல் கொம்யூனிசத்தின் முடிவை அறிவிக்கும் சொல்லாடலாக, இரண்டு தசாப்த காலத்துக்கு மேல், மேற்குலகு பயன்படுத்தி வந்துள்ளது.   

சிரியப் படைகள், இட்லிப்பை விடுதலை செய்து, மீளக்கைப்பற்றினால் அதை ‘வரலாற்றின் முடிவு’ என்று அழைக்கவியலும்; இது இன்னொரு வரலாற்றின் முடிவு.  

அமெரிக்காவின் ஒரு மய்ய உலகினதும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உலகெங்கும் நினைத்தபடி செய்து வந்த வரலாற்றுக்கு, முடிவு கட்டும் ஒன்றாகவும் இட்லிப் விடுதலை இருக்கும்.   

2011ஆம் ஆண்டு சிரியாவில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்கா தலைமையில் ‘நேட்டோ’, அங்கு கிளர்ச்சியாளர்களை உருவாக்கி, சிரிய அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டது.  

ஈராக்கில் சதாம் ஹூசைனை ஆட்சியில் இருந்து கவிழ்துக் கொலை செய்தமை, லிபியாவில் ஆக்கிரமிப்புப் போரை நடத்தி கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்து, அவரைக் கொன்றமை ஆகிய நிகழ்வுகளின் பின்னணியிலேயே, சிரியா மீதான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.   

ஈராக், லிபியா ஆகிய நாடுகளில்  பெற்றுக் கொண்ட வெற்றிகளையடுத்து, அமெரிக்க, ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் வயல்களை இலகுவாகக் கைப்பற்றிக் கொண்டமையானது, சிரியாவைத் தாக்குவதற்கான உற்சாகத்தை அமெரிக்காவுக்கு வழங்கியது.   

சிரியாவில் ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வர, கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா முயல்கிறது. அமெரிக்கா, 2005ஆம் ஆண்டிலிருந்து சிரியாவின் வலதுசாரி எதிர்க்கட்சிக்கு நிதியுதவி வழங்கிவருகிறது. இதை அமெரிக்காவும் அக்கட்சியும் வெளிப்பட ஏற்கின்றன.  

 மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் நடந்த ‘அரபு வசந்தத்தின்’ தொடர்ச்சியாக, ‘சிரியாவில் ஆட்சி மாற்றம் தேவை’ என்ற கோஷம் எழுப்பப்பட்டது. அதன்படி, 2011ஆம் ஆண்டு ‘அரசுக்கெதிரான கிளர்ச்சி’ எனத் தொடங்கப்பட்ட கிளர்ச்சியானது, படிப்படியாகப் போராகி, கடந்த ஐந்து ஆண்டுகளாக, முழு மத்திய கிழக்கிலும் தாக்கம் செலுத்தும் நெருக்கடியாகி உள்ளது.  

மத்திய கிழக்கில், அமெரிக்க நலன்களுக்கு மாறாகத் திகழும் நாடுகளில், ஈரானுக்கு அடுத்தபடியாக முக்கியமானது சிரியா.  

 இதனால், மத்திய கிழக்கை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் செயற்பாடுகளுக்கு, முட்டுக்கட்டையாக உள்ள சிரியாவின் பஷார் அல்-அசாட் ஆட்சியை அகற்றி, அமெரிக்க நலன்களுக்கு அடிபணியும் ஒரு ‘கைப்பாவை’ அரசாங்கத்தைக் கொண்டு, அவரைப் பிரதியீடு செய்யும் முயற்சியின் வெளிப்பாடாக, சிரிய உள்நாட்டு யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.  

மத்திய கிழக்கில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, சிரியா மிகவும் விஷேசமான தன்மைகளை உடைய நாடு. சிரியா, மதச் சகிப்புடைய, மதச்சார்பற்ற பல்லின நாடாக இருந்து வந்துள்ளது. அதன் ஜனாதிபதி பஷார் அல்-அசாட், ஷியா பிரிவுக்குட்பட்ட அலவ்வி மதப் பிரிவினராயினும் அவரது மனைவி சுன்னி பிரிவினராவர். சிரியாவில் கணிசமான எண்ணிக்கையில் குர்தியர்களும் ஆர்மேனிய கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள்.

 சிரியாவின் விசேட தன்மைகள், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா முடியாட்சிகளுக்கு உவப்பில்லாதவை. மேலும், இம்முடியாட்சிகளுக்கும் ஈரானுக்கும் உள்ள பிரச்சினையில், ஈரானின் பக்கம், சிரியா நிற்கின்றது. இதனாலேயே, சிரியாவில் அசாட்டின் ஆட்சியை அகற்ற, மேற்குலகுடன் இம்முடியாட்சிகளும் கங்கணம் கட்டின.   

தொடக்கத்தில் ஈராக்கிலும், லிபியாவிலும் நடைபெற்றது போல, இலகுவாக ஆட்சிமாற்றமொன்றை நிகழ்த்த முடியும் என அமெரிக்கா நினைத்தது. ஆனால், கிளர்ச்சிப்படைகளால் சில இடங்களைக் கைப்பற்ற முடிந்தாலும், தலைநகர் டமாஸ்கஸினுள் நுழைய முடியவில்லை. இப்பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தோன்றி, சிரியாவின் பலபகுதிகளைச் சூறையாடி, உலகையே ஒரு கலக்குக் கலக்கியது.   

சிரியாவின் ஆட்சிமாற்றம் மட்டுமன்றி, முழுமத்திய கிழக்கையும் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் அதன் பிராந்திய கூட்டாளிகளான சவூதி அரேபியா, துருக்கி, பாரசீக வளைகுடா முடியாட்சிகள், இஸ்‌ரேல் ஆகியவற்றின் மேலதிக நோக்கங்களுக்காக, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை வளர்த்தனர். அதற்குத் துணையாக, ஏனைய ‘ஜிகாதிய’ இயக்கங்களுக்கும் உதவிகளைச் செய்து, மத்திய கிழக்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் திட்டம் அரங்கேறத் தொடங்கியது.   

ஈராக், லிபிய விடயத்தில் விட்ட பிழையை, இன்னொரு முறை விடுவதற்கு, ரஷ்யா தயாராக இருக்கவில்லை. ரஷ்யாவைப் பொறுத்தவரையில், சிரியாவில் அமெரிக்க சார்பு ஆட்சி உருவாகுமாயின், அது ரஷ்யாவின் பிராந்திய நலன்களுக்கு மட்டுமன்றி, ஈரானுக்கும் லெபனானைத் தளமாகக் கொண்டியங்கும் ஹிஸ்புல்லாவுக்கும் பாரிய நெருக்கடியைக் கொடுக்கும். எனவே ஈராக், லிபியா விடயங்களில் அமைதியாக இருந்தது போல, சிரியா விடயத்திலும் ரஷ்யாவால் வேடிக்கை பார்க்கவியலாது.   

ரஷ்யா, தனது, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு வெளியே, கடற்படைத் துறைமுகத்தளத்தைத் கொண்டுள்ள ஒரே நாடு சிரியா. சிரியாவின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான டார்டோஸ்சில், ரஷ்யா படைத்தளத்தைக் கொண்டுள்ளது.   

பூகோளரீதியில் சிரியாவில், அல் அசாட் ஆட்சி அகற்றப்படுவது ரஷ்யாவை, அமெரிக்கா சுற்றிவளைப்பதற்கும், இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாதிகள், ரஷ்யா மீது போர் தொடுப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும்.   

மேலும், மத்திய கிழக்கில் எண்ணெய் வர்த்தகத்தின் அமெரிக்க ஏகபோகத்துக்கு வழிசெய்யும். இது ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களின் நலன்களுக்கு குழிபறிக்கும் அதேவேளை, சிரியா ஊடாக, கட்டார் புதிய எரிவாயுக்குழாயை நிறுவுவதன் மூலம், நேரடியாக மேற்கத்திய ஐரோப்பிய சந்தைகளை அணுகுவதற்கு வழிவகுக்கும்.  

இப்பின்னணியில், ரஷ்யா 2015ஆம் ஆண்டு சிரிய யுத்தத்தில் அசாட் அரசுக்கு ஆதரவாக இறங்கியது. சிரியாவின் ஆட்சிமாற்றம், அடுத்ததாக ஈரானைக் குறிவைக்கும் என நன்கறிந்த ஈரான், சிரியாவுக்கு இராணுவ உதவிகளையும் சிறப்புப் படையணிகளையும் வழங்கியது.  இங்கு நடந்த இன்னொரு விடயம் யாதெனில், சிரியாவுக்கு எதிராக, மத்திய கிழக்கு நாடுகளும் இஸ்‌ரேலும் கைகோர்த்து, ஆட்சிமாற்றத்துக்கு உழைத்தமையாகும்.   

இஸ்‌ரேல், சிரியாவில் ஆட்சிமாற்றத்துக்கு உதவுவதைத் தொடர்ந்து, லெபனானை மய்யமாகக் கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு, சிரிய அரசுக்குத் தமது ஆதரவை வழங்கியது.   
மேற்குலகம், இஸ்‌ரேல், மத்திய கிழக்கு முடியாட்சிகளின் கூட்டுக்கு எதிராக, சிரியா, ரஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லா ஆகியவை கைகோர்த்து நின்றன.   

ஒருகட்டத்தில் மிகவும் மோசமானதும் பயங்கரமானதுமான அமைப்பாகக் கருதப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை, ரஷ்யாவின் இராணுவத் தாக்குதல்கள் சின்னாபின்னமாக்கின.  இதைத் தொடர்ந்து, சிரிய இராணுவம் இழந்த பகுதிகளை, மெதுமெதுவாக விடுவிக்கத் தொடங்கியது. 

அதேவேளை, வீரம் நிறைந்த போரின் மூலம் ஈரானிய சிறப்புப்படைகளும் ஹிஸ்புல்லாப் போராளிகளும் பல பிரதேசங்களை விடுவித்ததோடு, ஈரானிய லெபனானிய எல்லைகளைக் காத்து நின்றனர். இன்று போர், அதன் கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளது.   

கிளர்ச்சியாளர்களின் கடைசிப் புகலிடமாக, சிரியாவின் வடமேற்குப் பிரதேசமான இட்லிப் மாறியுள்ளது. இட்லிப் மீதான தாக்குதலை, சிரிய இராணுவம் தொடங்கவிருந்த நிலையில் கடந்த வாரம் ரஷ்யா, துருக்கி, ஈரான் நாடுகளின் தலைவர்கள் சந்தித்தார்கள்.   

போர்நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படுமாறு, துருக்கி ஜனாதிபதி தய்யீப் ஏர்டோவான் விடுத்த கோரிக்கையை ரஷ்ய ஜனாதிபதி பூட்டின் மறுத்துவிட்டார். “யாருடன் நாம் பேசுவது, எதற்காகப் பேசுவது, பயங்கரவாதிகளுடன் பேசுவதற்காக இருந்த வாய்ப்புகள், எல்லாம் முடிந்துவிட்டன. நாம் அக்கதவுகளை, நீண்டகாலமாகத் திறந்து வைத்திருந்தோம். அவர்கள்தான் அக்கதவுகளை இழுத்து மூடினார்கள்” என்று பூட்டின் பதிலளித்தார்.   

இப்பின்னணியில், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஐ.நா பாதுகாப்புச் சபையில் இட்லிப்பில் மனிதப் பேரவலம் நடக்கும் ஆபத்து உள்ளதாகவும் இதனால் போரை உடனே நிறுத்தி, மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டன.   

இதில் பேசிய ஐ.நாவுக்கான பிரித்தானியத் தூதுவர் “இட்லிப்பில் பயங்கரவாதிகளை விட, குழந்தைகளே அதிகம் இருக்கிறார்கள். இதனால், இட்லிப் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதிக்க முடியாது” என்றார்.   

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவரோ “ரஷ்யாவும் சிரியாவும் இட்லிப் மீதான நடவடிக்கையைப் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றாலும், அவர்கள் பள்ளிக்கூடங்கள், வைத்தியசாலைகள் மீதும் குண்டுவீசுகிறார்கள். இது தவறானது. இம்மன்றம் இதைப் பார்த்துக் கொண்டு, சும்மா இருக்கக் கூடாது” என்று எச்சரித்தார்.   

இதேமன்றம் தான், ஈராக்கில் பள்ளிக்கூடங்கள், வைத்தியசாலைகள் மீது அமெரிக்கக் கூட்டுப்படைகள் விமானத் தாக்குதல் நடத்திய போதும் சரி, கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்ட போதும் சரி, பார்த்துக் கொண்டு சும்மா இருந்தது.   

எந்தப் பிரித்தானியா குழந்தைகளுக்காகக் கவலைப்படுகிறதோ, அதேநாட்டின் படைகள் ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், லிபியாவில், சிரியாவில் விமானத்தாக்குதல் மூலமும் படை நடவடிக்கைகள் மூலமும் கொன்ற குழந்தைகள், குழந்தைகள் இல்லையா? முரண்நகை என்னவென்றால், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மூலம், பாகிஸ்தானில் எத்தனை பாடசாலைகள், வணக்கத்தலங்கள், திருமண நிகழ்வுகள், வைத்தியசாலைகள் மீது குண்டுவீசியுள்ளது.  
இன்று அமெரிக்காவும் மேற்குலகும் கையறு நிலையில் நிற்கின்றன. அமெரிக்க, பிரித்தானியப் பிரதிநிதிகளின் கூற்று அதையே சொல்கிறது. 

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பாதுகாப்புச் சபையில் உள்ள ‘வீட்டோ’ அதிகாரம், ஐ.நாவின் எதுவித தலையீட்டுக்குமான வாய்ப்பை இல்லாமல் செய்துள்ளது.   

இட்லிப்பை சிரியப் படைகள் விடுவித்தால், அது அமெரிக்காவுக்குப் பேரிடியாக இருக்கும். உலகின் மிகப்பெரிய இராணுவத்தையும் தொழில்நுட்பத்தையும் நவீன ஆயுதங்களையும் கொண்ட ஒரு நாடு, போரில் அவமானகரமான தோல்வியைத் தழுவுகிறது என்றால் அதன் தாக்கம் எத்தகையது என்பதை, ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   

பத்து ஆண்டுகளுக்கு முன், இவ்வாறு ஒன்றைக் கற்பனை செய்து பார்த்திருக்கக் கூட முடியாது. ஏன், இப்போதும் கூட, பலரால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.   

ஆனால், இட்லிப்பை விடுவிப்பது அவ்வளவு இலகுவானதாக இராது. ஒருபுறம் அமெரிக்க சார்புப் போராளிகளுக்குத் தப்பிஒடுவதற்கு இடமில்லை. சிரியப் படைகள் முன்னேறியபோது, பின்வாங்கிப் பின்வாங்கி, இப்போது இட்லிப்புக்கு வந்துள்ளார்கள்.   

ஒரேவழி,  அவர்கள் துருக்கிக்குச் செல்வது. வேறு தெரிவுகள் அவர்களுக்கு இல்லை. இதனால் தான் போர்நிறுத்தத்துக்கு துருக்கி ஜனாதிபதி ஏர்டோவான் கோரினார். அவரது கதை, சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதை போலாகும். சிரிய யுத்தம் தொடங்கியபோது, அமெரிக்காவுக்கு ஆதரவாக, சிரியாவுக்கு எதிரான குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், அமெரிக்க-சிரிய விரிசல், துருக்கிய குர்துகளுக்கு அமெரிக்கா ஆயுதமும் ஆதரவும் வழங்கி, துருக்கிக்கு எதிரான போருக்கு வழிசெய்துள்ளது.   

இட்லிப்பில் பிரித்தானிய உளவுத்துறையான MI-6 இராசாயனத் தாக்குதல் ஒன்றைச் செய்து, அப்பழியை சிரிய அரசாங்கத்தின் மீது போடுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ரிட்சர்ட் பிளெக் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இட்லிப் விடுவிப்பைத் தவிர்ப்பதற்காக, இரசாயனத் தாக்குதல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கின்றன என, கடந்த வாரம் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.   

சிரிய யுத்தத்தின் போக்கு, உலக அலுவல்களின் இன்னொரு பக்கத்தைக் காட்டி நிற்கிறது. ஒருபுறம் அமெரிக்கா,  ஜனாதிபதி ட்ரம்பின் கீழ் புதிய திசையில் பயணிக்கிறது. அது இயலாமையின் விளைவு என எமக்கு விளங்க வேண்டும். ட்ரம்பின் அப்பட்டமான வெள்ளை இனவாதமும் அயல்நாடுகள் பற்றிய பகையுணர்வும் அமெரிக்காவின் வறுமைப்பட்ட வெள்ளை இனத்தவரிடையே மிகுந்த ஏற்பைப் பெற்றன.   

அமெரிக்கா, தனது குடிவரவுக் கொள்கையை இனவாத நோக்கில் கட்டுப்படுத்துவது, அமெரிக்கப் பொருளாதார அவலத்துக்குப் பிறரைப் பழிகூறும் கைங்கரியமாகும்.  

இன்று அமெரிக்கா, தனது எதிரிகளுடன் மட்டுமல்ல தனது, கூட்டாளிகளுடனேயே மல்லுக் கட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்காவின் உறவுக்குக் கேடாகச் சில இறக்குமதித் தீர்வைகளும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகலுக்குப் பகிரங்க ஆதரவும் ஐரோப்பிய நாடுகள் மீது அழுத்தம் செலுத்தும் நகர்வுகளில் சிலவாகும்.   

நேற்றோ| இராணுவக் கூட்டமைப்பின் செலவுகளுக்குக் கூடிய பொறுப்பை, ஐரோப்பிய நாடுகளிடம் தள்ளியது என்பன, ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கச் செல்வாக்கு வலுவிழப்பதை தெளிவாகக் காட்டுகின்றன.  அதேவேளை, ‘பிரிக்ஸிட்’டும் உறுப்பு நாடுகளிடையேயான முரண்பாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பலவீனப்படுத்தியுள்ளதோடு, அதன் எதிர்காலம் குறித்த வினாக்களை எழுப்பியுள்ளன.   

இப்பின்னணியிலேயே சிரிய நிலைவரங்களை நோக்க வேண்டும். வரலாற்றின் முடிவில், இட்லிப் நிற்கிறது. அமெரிக்காவும் மேற்குலகும் எப்பாடுபட்டும் இட்லிப்பைத் தக்கவைக்கவோ அல்லது மனிதாபிமானக் காரணிகளைக் காட்டி, நேரடியாகத் தலையிட்டு, மத்திய கிழக்கில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த முனையும்.

ஆனால் அதற்கு எவ்வாறு ரஷ்யாவும் ஈரானும் எதிர்வினையாற்றும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எது எவ்வாறாயினும், இப்போது வரலாற்றின் முடிவுக்கான நேரம் என்று சொல்லக் கூடிய காலம், வந்திருப்பது சாதாரணமானதல்ல.   

சோவியத் ஒன்றியத்தின் முடிவை, வரவாற்றின் முடிவு என்று அறிவித்தால், அமெரிக்க ஏகாதிபத்திய உலகப் பொலிஸ்காரன் பாத்திரத்தின் முடிவையும் அவ்வாறு அழைக்கவியலும். நாம் விரும்பியோ விரும்பாமலோ உலகம் மாறுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .