Editorial / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தேர்தல் காலங்களில் வீராப்புப் பேசும் தலைமைகளை மக்கள் ஆதரித்து, அவ்வாறானவர்களுக்கு, வாக்களிக்கும் நிலைமை மாறவேண்டும்” என்று கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
“எமது முஸ்லிம் சமூகம், கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக, எமது சமூகம் உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் தொண்டு நிறுவனத்தின் உதவியின் ஊடாக, பொத்துவில் ஹிஜ்ரா நகரில் நவீன முறையில் அமைக்கப்படவுள்ள ஐம்பது வீட்டுத் திட்டத்துக்கான, அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கிராமம், சேஹ் செய்யத் பின் சுல்தான் அல்-நஹ்யன் கிராமம் என்னும் பெயரில் உருவாக்கப்படவுள்ளது.
அங்கு, நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“எமது காணிகள் எல்லாம் வன வளத்துக்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவைகளை எல்லாம் கேட்பார், பார்ப்பாரற்ற சமூகமாகவும் தேர்தல் காலங்களில் மாத்திரம் கோஷமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எந்தச் சமூகத்திலும் இல்லாதவாறு, எங்களை நாங்களே ஏமாற்றுகின்ற கலாசாரத்தை கொண்ட சமூகமாக இன்று வரை எமது சமூகம் இருந்து வருகின்றது. இறைவன், எமக்களித்திருக்கின்ற அறிவை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். புரையோடிப் போயிருக்கும் தீய விடயங்களிலிருந்து எமது சமூகத்தைக் காத்துக் கொள்ள நாம் விழிப்படைய வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“சீரிய சிந்தனைகளை எமக்குள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும், கல்வியிலே எமது சமூகம் உயர்வடைய வேண்டும். நல்ல பொருளாதாரத்தை, கொண்ட சமூகமாக இந்நாட்டிலே எமது சமூகம் மிளிர்வதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்” என்றார்.
“எதிர்காலச் சந்ததியினரை சுதந்திரமாகவும், வளம் மிக்க சமூகத்தினராகவும் வாழ வைப்பதற்கான பாரிய வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல அனைவரும் முனைப்புடன் செயற்பட வேண்டும். அதற்காக, நாம் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமைப்பட்டு செயற்படுகின்ற கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். விட்டுக் கொடுப்புடனும் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் செயற்படுகின்றவர்களாக, நாம் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“இந்த நாட்டில், இனவாதம் மலிந்து கிடக்கின்ற இக்காலத்தில் நல்ல பல திட்டங்களை நாம் கொண்டு வருகின்றபோது உதவிகளைச் செய்யாமல் உபத்திரங்ளைக் கொடுக்கின்ற ஒரு கூட்டத்தினர் இந்நாட்டில் வளர்ந்து வருகின்றனர். இத்தருணத்தில், நல்லெண்ணம் கொண்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும், கல்விமான்களும் எமது மக்களுக்கான நல்ல பல காரியங்களைச் செய்து கொடுப்பதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான் நாம் நல்ல பல அபிவிருத்திகளைச் செய்ய முடியும்” என்றார்.
“பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டியது, காலத்தின் தேவையாக உள்ளது. இங்குள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியதாக உள்ளது.
காலத்துக்கு காலம் வாய்ப்பேச்சுகளை மாத்திரம் வீசிச் செல்கின்ற தலைமைகளாக, நாம் இருக்க முடியாது. செயற்பாடுகளில் நமது வீரத்தைக் காட்ட வேண்டும். மக்களுக்காக நல்ல பல சேவைகளைப் புரிவதற்காக, நாம் முன்னின்று செயற்படுகின்றோம்” என்றார்.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago