2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

தூசு தட்டப்படும் மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம்

Freelancer   / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகந்துரே மதுஷ், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் காவலில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது  விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி அதிகாலை மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் வைத்து மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கிராம் ஹெரோயினை மீட்கச் சென்றபோது, திட்டமிட்ட குற்றக்குழுக்களினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.

பலத்த பாதுகாப்பு மற்றும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருந்த மதுஷ் மீது மட்டும்  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எப்படி? என்ற கேள்வி இன்றும் நீடிக்கிறது.

முன்னதாக, மதுஷ் டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, 18 மாதங்கள் குற்றப்புலனாய்வு பிரிவின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவரோடு தொடர்புடைய 80க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் கசிந்த நிலையில், அதில் சில அமைச்சர்களும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், இந்த விசாரணைகளை முன்னெடுத்த ஷானி அபேசேகர போன்ற அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, விசாரணைகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றப்புலனாய்வு திணைக்கத்தின் வசம் இருந்த மதுஷ், திடீரென மேல் மட்ட அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதன் மூலம் மதுஷூடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இது ஒரு "திட்டமிட்ட கொலை" என்ற சந்தேகம் சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டது.

எனினும், 5 ஆண்டுகள் கடந்தும் இந்த மரணம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், மதுஷின் குடும்பத்தினர் மற்றும் சிவில் அமைப்புகளின் தொடர் கோரிக்கையை அடுத்து, தற்போது குற்றப்புலனாய்வு பிரிவு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம் மதுஷின் போதைப்பொருள் வலையமைப்பில் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .