2025 ஜூலை 09, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோகம்: எம்.எஸ்.சுபைர்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையிலுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் சுதேச வைத்தியத்துறை, சிறுவர் பராமரிப்பு மகளிர் விவகார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு மியானி நகர் சிறுவர் இல்லத்தில் கிழக்கு மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட உலக சிறுவர் தின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சுபைர்,

ஒவ்வொரு வருடமும் சுமார் 4 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு சிறுவர்கள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணங்களில் 78 அநாதைச் சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. அவற்றினையும் நாம் பராமரித்து வருகின்றோம். அதேபோன்று 78 பராமரிப்பு நிலையங்களும் உள்ளன. அவற்றினையும் கிழக்கு மாகாணசபையூடாக பராமரித்து
வருகின்றோம்.

இதேபோன்று கிழக்கு மகாணத்தில் உள்ள சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகுவதிலிருந்து பாதுகாத்து அவர்களை சமூகத்தில் ஒரு சிறந்த பிரஜைகளாக மாற்றுவதற்கான பாரிய பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது. அதனாலே தான் நாங்கள் மிக நன்றாக இந்த சிறுவர் நன்னடத்தை பிரிவை நடத்தி வருகின்றோம்.

ஆனாலும் எமது கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது. குறிப்பாக எமது கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுவருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த இடத்திலே சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க ஒழுங்கு செய்துள்ளோம்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் துஷ்பிரயோகங்களை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. சிறுவர்களே நாளைய தலைவர்கள். அவர்களை சிறந்த முறையில் சமூகத்தில் கொண்டு  செல்வது நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இன்று எமது பகுதிகளில் பதிவுசெய்யப்படாமல் இயங்கும் சில சிறுவர் இல்லங்கள் சிறுவர்களை அடக்குமுறைக்குள் வைத்துள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறான சிறுவர் இல்லங்களை இனம்கண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளோம்.

இவ்வாறு பதிவுசெய்யாத சிறுவர் இல்லங்கள் தங்களது இல்லங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபையின் நீர்வழங்கல், வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை, மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள பணிப்பாளர் இசான் விஜயதிலக, யுனிசெப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், கிழக்கு மாகாணத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .