2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் சடலம் 9 மாதங்களுக்கு பின் தோண்டியெடுப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் மரணமான பெண் ஒருவரின் சடலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக இன்று செவ்வாய்க்கிழமை தோண்டப்பட்டது.

கடந்த 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி வயிற்று வலியினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடித்தெருவைச் சேர்ந்த 42 வயதான ஜேசுதாசன் கோல்டன் பென்சமின் சாந்தி மரணமடைந்தார்.

இப்பெண்ணின் சடலம் கல்லியன்காடு மயானத்தில் 19.09.2012 அன்று அடக்கம் செய்யப்பட்டது.

இப்பெண்ணின் மரணம் தொடர்பில் இவருடைய கணவர்; ஜேசுதாஸ் கோல்டன் பென்சமின் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாட்டு கடிதத்தினையடுத்து மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

இதனை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா இப்பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதியின் உத்தரவுக்கமைவாக சடலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நீதவானின் முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளான டாக்டர் எம்.குணதிலக, மற்றும் டாக்டர் எம்.ஏ.அப்துர் றஹ்மான், மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அனுரத்த ஹக்மன பண்டார, மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறப்பதிகாரி ஐ.பி.சாந்தகுமார் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

இந்த பெண்ணின் சடலம் தோண்டும்போது அவரின் கணவர் ஜேசுதாஸ் கோல்டன் பென்சமின் மற்றும் அவரின் குடும்பத்தினரும் சமூகமளித்திருந்தனர். தோண்டியெடுக்கப்பட்ட  பெண்ணின் சடலம் அம்பாறை  வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த பெண் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வயிற்று வலியினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு செப்டெம்பர் 17ஆம் திகதி மரணமடைந்தார்.

19ஆம் திகதி இவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இப்பெண்ணின் மரணம் தொடர்பில் இவரது கணவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரண்டு மகப்பேற்று வைத்தியர்களுக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X