2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

’அரசியல் நாடகங்களை நிறுத்தி மக்களுக்கு உதவ முன்வாருங்கள்’

Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் வாக்குகளைப் பெற்ற மலையக அரசியல் தலைமைகள், தங்களது அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள அவர், 

'கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், எம் மக்கள் வருமானத்தை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருகிறார்கள். எம் மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள், இதுவரையில் பாதிக்கப்பட்ட எம் மக்களை சரியான முறையில் சென்றடையாமல், மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

'இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் என்னை நாடி இருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கிராம உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பான பல வாய் தர்க்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 
'தோட்டத் தொழிலாளிக்கு நிவாரணம் என்று எதுவுமே வழங்கப்படவில்லை. மாதா மாதம் சம்பளத்தில் அறவிடும் வகையிலேயே, கடனாக பொருள்;கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

'கடனடிப்படையில்கூட சில தோட்ட நிர்வாகங்களால் தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அதோடு இந்த நிவாரணத்தொகை சில தோட்ட நிர்வாகங்களாhல் இம்மாத சம்பளத்திலிருந்தே கழிக்கப்பட்டுள்ளது. 

'இது தொடர்பாக எந்தவோர் அழுத்தமும் தொழிற்சங்கங்களால் தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்படவில்லை. இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் கூட, மக்களுக்காக குரல்கொடுக்க முன்வராத தொழிற்சங்கங்கள் எதற்காக நடத்தப்படுகின்றன? தொழிற்சங்கக் காரியாலயங்கள் எதற்கு! இம்மாத சந்தா அறவிடமாட்டோம் என்று கூறி அறவிட்ட சந்தா எதற்கு ?

'வெளிவேலைகள் செய்பவர்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சமுர்த்தியின் மூலமும் அரசாங்கம் மூலமும் இரு கட்டங்களாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது. இது குறித்த கட்சியின் சார்பான முக்கியஸ்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதேத் தவிர பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் சரியான மக்களைச் சென்றடையவில்லை. பல இடங்களில் கட்சி சார்பானவர்களினால் பெயர்பட்டியல் பெறப்பட்டு அரசியல் தலையீடு இடம்பெற்றிருக்கிறது.

'எவ்வித நிவாரணமாக இருந்தாலும் எம்மக்களுக்கு கிடைப்பதற்கு காலதாமதமாகுவது ஏன்? ஒரு சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தில் தான் எம்மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள.? மக்களின் வாக்குகளைப் பெற்ற மலையக அரசியல் தலைமைகள், தங்களது அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

'மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது, கட்சி பேதங்களை மறந்து, ஒன்றிணைய முன் வர வேண்டும். ஒரு தோட்டத்திற்கு குறித்த கட்சி சார்பான பத்து இருபது பேரை தெரிவு செய்து உலருணவு பொதிகளை வழங்குவதிலும் பார்க்க, அதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதிகள் எம்மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தர முன்வர வேண்டும்' எனவும் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .