2025 ஜூலை 12, சனிக்கிழமை

அலைபேசி விற்பனை நிலையம் தீயில் கருகியது

Sudharshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி நகரப் பகுதியில் அமைந்துள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் இன்று புதன்கிழமை (13) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் அருகிலிருந்த இரண்டு பலசரக்குக் கடைகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதென அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அலைபேசி விற்பனை நிலையத்தில் இருந்த 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களும், இரண்டு பலசரக்கு கடைகளில் இருந்த 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

மேற்படி தொலைத்தொடர்பு நிலையத்தின் பின்பக்க கூரையில் தீ பரவத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து, கூரை ஓடுகள் கீழே வீழும் சத்தத்தைக் கேட்ட தனியார் வங்கியின் காவலாளி, இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், இராணுவத்தினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும், அலைபேசி விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. தொடர்ந்து, பலசரக்குக் கடைகளுக்கு பரவிய தீயை யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தனிப்பட்ட விரோதம் காரணமாக அலைபேசி நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். தடய அறிவியல் பொலிஸார் மூலம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .