2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தருவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவம் மிக உறுதியாக உள்ளதென கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம், அட்டாளைச்சேனை கடற்கரை ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளார். இது தொடர்பில் அட்டாளைச்சேனை மத்திய குழுவில் அங்கம் வகிக்கின்ற  முக்கிய பதவிகளிலும் சிலரைச் சந்தித்து இது தொடர்பில்  தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இதற்கான அறிவிப்பையும் மிக விரைவில் அவர் வெளியிடவுள்ளார்' என்றார்.

'எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி, கட்சியின் வருடாந்த மாநாடு கண்டி பொல்கொல்லவில்  நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் அல்லது அதற்கு முன்னர் அட்டாளைச்சேனைக்குரிய அரசியல் அதிகாரம்  பற்றி வெளியிடப்படவுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.

'கட்சியும் கட்சித் தலைமையும் வழங்கிய வாக்குறுதியை  கட்டாயம் நிறைவேற்றும்.  30 வருடங்களாக அட்டாளைச்சேனை பிரதேச மக்களிடத்தில் இருந்துவரும் தாகத்தை கட்சித்; தலைமை மிக விரைவில் தீர்க்கும்' எனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன், மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சி.ஹாரீத், மத்திய குழுவின் ஆலோசகர்களான யூ.எம்.வாஹிட், மு.காவின் ஸ்தாபக செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியமான எஸ்.எம்.ஏ.கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எம்.எல்.கலீல் உள்ளிட்ட மத்திய குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X