2025 மே 05, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்ட நெல் கொள்வனவுக்கு ரூ.2,200 மில். நிதியொதுக்கீடு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் கொள்வனவுக்கு, அரசாங்கத்தால் 2,200 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்தார்.

2018/2019ஆம் ஆண்டுக்கான் பெரும்போக நெற்செய்கை நெல் கொள்வனவு, அக்கரைப்பற்று பிரதேச விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் அங்குராப்பண வைபவம், அக்கரைப்பற்று நெல் களஞ்சியசாலையில் இன்று (06) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தும் சபையின் அம்பாறைப் பிராந்திய முகாமையாளர் நிமால் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அரசாங்க அதிபர் தொடர்ந்து உரையாற்றுகையில், அம்பாறை மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கான ஒத்துழைப்பை அமைச்சர் தயா கமகே வழங்கியிருந்தார் என்றார்.

விவசாயிகள் தங்களது நெல்லை அரசாங்க உத்தரவாத விலைக்கு வழங்கி வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

இந்நெல் கொள்வனவுக்கு முதற்கட்டமாக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு விவசாயிடமிருந்து 02 ஆயிரம் கிலோகிராம் நெல்லை மாத்திரமே கொள்வனவு செய்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக அவ்விடத்திலிருந்தே கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விடுத்த வேண்டுகோளுக்கினங்க விவசாய அமைச்சு மற்றும் நிதி அமைச்சர்கள் ஆகியோர்களுடன் பேசி 03 ஆயிரம் கிலோவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள அனைத்து நெல்லையும், கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுப்பேன்.

இங்கு ஈரமான நெல்லை உலர வைப்பதற்கு இயந்திரம் ஒன்று இப் பிராந்திய இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் உங்களது நெல்லை உலர வைத்து வழங்க முடியும். இவ்வியந்திரத்தை கண்டுபிடித்த இளைஞரை பாராட்டுகின்றேனென்றார்.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான், அமைச்சர் தயா கமகேவின் இணைப்புச் செயலாளர் சுரேஸ், அக்கரைப்பற்று விவசாய அமைப்பின் தலைவர் ஏ.சீ. சிறாஜுடீன் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X