2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

நெசவுத் தொழிலுக்கான நூல் இல்லாமையால் 10,000 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 13 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

நெசவுத் தொழிலுக்குரிய பிரதான மூலப்பொருளான நூலினைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் தோன்றியுள்ளதால், மருதமுனைப் பிரதேசத்தில் 10,000இற்கும் அதிகமானோர் தொழிலிழந்துள்ளதாக அங்குள்ள நெசவாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியாலிருந்து நூலினை இறக்குமதி செய்யும் கொழும்பிலுள்ள மொத்த வியாபாரிகள் மூலமாகவே, மருதமுனை நெசவாளர்கள் தமக்கான நூலினைப் பெற்றுவந்தனர். ஆயினும், கடந்த மூன்று மாதங்களாக  இந்தியாவிலிருந்து நூல் கிடைக்காமையினால் மொத்த வியாபாரிகளிடம் நூலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவ் நெசவாளர்கள் குறிப்பிட்டனர்.

நேரடி நெசவாளர்கள் தவிர நெசவுத் தொழிலில் நூலை நிறமூட்டுபவர்கள், நூல் சுற்றுவோர், பாவோடுபவர்கள், பாப்பிணைப்பவர்கள் மற்றும் தறியடிப்போர் என 10,000இற்கும் மேற்பட்டோர் தற்போதைய நிலையால் தொழிலின்றிப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் சாரன்களுக்குகுச் சவாலாக இலங்கையின் மருதமுனைப் பிரதேச சாரன்கள் சந்தையில் காணப்படுவதாகவும் இதனால், இந்திய சாரன்களின் சந்தையினை இலங்கையில் பிடித்து வைத்திருப்பதற்காகவே  இலங்கைக்கு நூலை அனுப்புவதற்கு இந்தியா பின்னடிப்பதாகவும்  நெசவுத் தொழிற்பேட்டை உரிமையாளரொருவர் கூறினார்.

கடந்த சுனாமிப் பேரழிவின்போது, மருதமுனையில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்த 366 குடும்பத்தவர்கள் தமது பிரதான தொழில் உபகரணங்களை இழந்தனர். அவ்வாறு இழக்கப்பட்டவைகளில் 768 தறிகளும் அதற்கான பொருட்களும் முக்கியமானவை.

இதன் பின்னர் நெசவுத் தொழிலில் மீண்டும் மருதமுனைப் பிரதேசம் புத்துயிர் பெற்றுவந்த நிலையில், மீண்டும் மூலப்பொருளான நூலினைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலின் காரணமாக நெசவுத் தொழிலில் பாதிப்பேற்பட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .