2025 ஜூன் 09, திங்கட்கிழமை

நஷ்டஈடு வழங்கக்கோரும் மீனவர்கள்

A.P.Mathan   / 2011 ஜூன் 17 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளால் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை மீனவர்களுக்கு அரசாங்கம் உறுதியளித்தமைக்கிணங்க இதுவரை நஷ்ட ஈடுகள் எதனையும் வழங்காமல் காலம் கடத்தி வருகின்றமை குறித்து அப்பகுதி மீனவர்கள் தமது கவலையினையும் விசனங்களினையும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவதுளூ

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகள் சில வருடங்களுக்கு முன்னர் மீன்பிடித் தொழிலில் பெயர் பெற்று விளங்கிய கிராமங்களாகும். ஒரு காலத்தில் இப்பிரதேசத்திலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், இப்போது நிலைமையோ தலைகீழ்!

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் ஒலுவில் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நிர்மாணப் பணிகள் காரணமாக, இப்பிரதேசத்தின் மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிப்படைந்து போயுள்ளது.

இப்பிரதேசக் கடலில் - மிக அதிகமாக மீன்கள் கிடைக்கும் பகுதிகளை உள்ளடக்கி ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டமை, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒலுவில் துறைமுகப் பகுதிக்குள் மீனவர்கள் அனுமதிக்கப்படாமை உள்ளிட்ட பல காரணங்களால் மீன்பிடித் தொழில் இப் பிரதேசத்தில் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக, ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்படுவதால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள கரைவலை மீனவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம், துறைமுகப் பகுதியில் கரையிலிருந்து கடலை நோக்கி - பாரிய பாறாங்கற்களைக் கொண்டு 'கடல் அலைதாங்கிக்கான பாதை'யொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கரைவலை ஊடாக மீன் பிடிப்பது மிகவும் சிரமமாகவுள்ளதாய் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனில், மீனவர்களின் கரைவலைகள் கடல் நீரோட்டத்தில் இழுபட்டுச் சென்று 'அலைதாங்கிப் பாதை'யின் பாறாங்கற்களில் சிக்கிச் சேதமடைவதால் பாரிய நஷ்டத்தினை தாம் எதிர்கொள்ள நேரிடுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த வகையில், ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளால் இப்பிரதேச மீனவர்கள் தொழில் ரீதியாகப் பாதிப்புக்குள்ளானமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. எனவே, பாதிக்கப்பட்ட மீனவர்கள் மாற்றுத் தொழிலொன்றை மேற்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு துறைமுகங்கள் அமைச்சினூடாக நஷ்டஈட்டுக் கொடுப்பனவொன்றினை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் சில வருடங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களில் ஒரு தொகையினருக்கு அரசாங்கம் நஷ்டஈடாக ஒரு தொகைப் பணத்தினை வழங்கியது.

ஆயினும், ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியினால் அட்டாளைச்சேனையில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இதுவரை அரசாங்கம் எந்தவிதமான நஷ்டஈடுகளையும் வழங்கவில்லை.

அட்டாளைச்சேனையில் பதிவு செய்யப்பட்ட 08 மீனவர் அமைப்புக்கள் உள்ளன. இவற்றில் மொத்தமாக 416 அங்கத்தவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பல வருடங்களுக்கு முன்னர் தமக்கான இழப்பீட்டுக்காக துறைமுகங்கள் அமைச்சிடம் எழுத்து மூலம் விண்ணப்பித்தும் இதுவரை இவர்களுக்கான நஷ்டஈடு வழங்கப்படவேயில்லை. இது குறித்து இங்குள்ள மீனவர்கள் தமது விசனத்தைத் தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளினால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையை இந்த மீனவர்கள் அதிகாரிகள் மூலமாக உறுதிப்படுத்திய ஆவணங்களையும் துறைமுக அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தவிரவும், பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை மீனவர்கள் தங்கள் மீனவர் அமைப்புக்களினூடாகவும், ஒன்றினைந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஜனாதிபதி போன்றோரிடம் எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் முறையிட்டும் இதுவரை எதுவிதமான தீர்வுகளும் கிடைக்கவேயில்லை.

ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளால் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளபோதும், அதே பிரதேசத்திலுள்ள அட்டாளைச்சேனைக் கிராம மீனவர்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதன் பின்னணிதான் என்ன என்று பாதிக்கப்பட்டோர் வினவுகின்றனர்.

இதேவேளை, உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் தலையிட்டு தமக்கான நஷ்டஈட்டினை விரைவில் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இவர்கள் கோருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

6 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

6 hours ago - 0     - 6

மன்னிப்பு

6 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

6 hours ago - 0     - 5