2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு விமலவீர அதிருப்தி

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கிழக்கு மாகாண ஆசிரியர் இடம்மாற்றங்களை எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் பின்னரே மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை தீர்மானமொன்றை எடுத்துள்ளபோதும், இந்த இடமாற்றங்களை தற்போது அமுல்படுத்த வேண்டுமென முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஏன் கூறியுள்ளார் என்று தமக்குப் புரியவில்லை என கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

சாய்ந்தமருது 'சீ பிரீஸ்' ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தைக் கண்டித்து அம்பாறை மாவட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுவரும் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிடும் பொருட்டு, இன்றைய தினம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தினை அடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கல்வியமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,

'வருட நடுப்பகுதியில் இவ்வாறானதொரு இடமாற்றம் இடம்பெறுவதால் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வியில் மோசமான தாக்கங்கள் ஏற்படும். ஆகவே, இந்த இடமாற்றத்தினை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் மேற்கொண்டால் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது.

எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர் புஷ்பராஜா கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை டிசம்பர் மாதம் மேற்கொள்ள வேண்டுமெனக் கோரும் பிரேரணையொன்றினைக் கொண்டுவரவுள்ளார். அந்தப் பிரேரணையில் இடமாற்றங்களை உரிய முறையிலும், ஒரு குழுவொன்றினை அமைத்து ஆராய்ந்தும் வழங்க வேண்டுமெனக் கோரப்படும்.

குறிப்பிட்ட பிரேரணை அங்கீகரிக்கப்பட்ட பின்னர் - அதை ஆளுநருக்கு நாம் வழங்குவோம். சிலவேளை ஆளுநர் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தால், நிச்சயமாக நாம் சபைப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு கடற்படை அதிகாரி. அவருக்கு பொதுமக்களின் விருப்பு வெறுப்புகள் பற்றித் தெரியாது. ஏனைய மாகாணங்களிலும் மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.

ஆனால், கிழக்கில் மட்டும் ஏன் இந்த இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு ஆளுநர் அவசரப்படுகின்றார்? கிழக்கு மாகாண ஆளுநர் வேண்டுமென்றே இந்த மாகாணத்தின் கல்வியினைச் சீரழிக்க முயல்கின்றார். இந்த இடமாற்றத்தை பிள்ளைகள், ஆசிரியர், பெற்றோர் என யாரும் விரும்பவில்லை. அப்படியென்றால் இந்த இடமாற்றம் யாருக்காக?' என்றார்.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் - கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கீழ் கடமையாற்றுவோராக இருந்தும், இந்த இடமாற்றம் தொடர்பில் அமைச்சரின் தீர்மானங்களை அல்லது விருப்பங்களை மீறி ஏன் செயற்படுகின்றனர் என இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றினை எழுப்பினார். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், 'தனக்கும் இதற்கான விடை தெரியவில்லை' என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • hari Saturday, 18 June 2011 12:21 PM

    இந்த மாறுதல் தொடர்பாக கிழக்கு மாகாண அமைச்சர்களும் கல்வி அதிகாரிகளும் முன்னுக்கு பின் முரண்பாடான கருத்துக்களாய் வெளியிடுகின்றனர். சாதாரண, உயர்தர, புலமைப்பரில் பரீட்சைகள் புது விடயங்களல்ல. அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான ஆசிரியர்களை பாதுகாக்கும் மற்றும் பழிவாங்கும் எணணங்களால் தான் ஒழுங்கான திட்டம் ஒன்றினை முன்வைத்து மாறுதலை அமுல் நடத்தமுடியவில்லை. பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் முறைப்பாடுகளை கேட்டால் ஏதோ ஒரு வகையில் பழிவாங்கலும் இருக்கிறது. முறைப்பாட்டுக் குழு வேண்டும்.

    Reply : 0       0

    Dean Saturday, 18 June 2011 12:43 PM

    கௌரவ கல்வி அமைச்சர் அவர்களே, நீங்கள் யாராலோ பிழையாக வழிகாட்டப் படுகிறீர்கள் மட்டுமல்ல ஆளுநரிடம் உள்ள பழைய பகையை இதை வைத்து தீர்க்கப் பார்க்கிறீர்கள் . ஆசிரியர் குறைந்த பாடசாலைகளைப் பற்றி சிந்தியுங்கள்.

    Reply : 0       0

    vaasahan Saturday, 18 June 2011 01:26 PM

    விஞ்ஞான பூர்வமான புத்திக்கூர்மையான திட்டமிடல் பற்றிய அறிவும் ஆற்றலும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் பிரக்ஞையும் இல்லாத அரசியலை மட்டுமே மூலதனமாகக் கொண்ட அதிகாரிகளை உயர்மட்ட கல்வி நிர்வாகிகளக நியமித்த மாகாண கல்வியமைச்சு முதலில் தன்னை திருத்திக்கொள்ளுமா? சட்டமும் பிரமாணங்களும் சொல்லும் இடமாற்றம் தொடர்பான விதிகளை விட்டுவிட்டு ஆளுநரின் உத்தரவுக்காக வான்கதவு திறக்கும் இடமாற்றம் செய்யும் பணிப்பாளர் ஒருவர் தேவைதானா? முதலில் அதனை செய்யுங்கள் 'தில்' இருந்தால்.

    Reply : 0       0

    Irshad Sunday, 19 June 2011 02:27 AM

    கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த கல்வி அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியர் இடமாற்றத்தினை ஆதரிக்க வேண்டும் . மாறாக தங்களது சுயநலம் பற்றி சிந்திக்க கூடாது. நீங்கள் பாருங்கள் அடுத்தது ஆசிரியர்கள் தேவை என்று யாராவது ஆர்பாட்டம் செய்தால் அவர்கள் உண்மையான கல்வி ஆதரவாளர்களும் சமூக பற்றுள்ளவர்களுமாவர்.

    Reply : 0       0

    vaasahan Sunday, 19 June 2011 04:11 AM

    தேவை உள்ள இடங்கள் இனங்காணப்பட்டு முறைப்படி மாற்றாது சென்ற ஆண்டு வெளி வலயத்தில் இருந்து நூற்றி ஐம்பது பேரை வஞ்சகமாக சம்மாந்துறைக்கு மாற்றி இப்போது அத்தொகயோடு நூற்றி எண்பத்து ஐந்து மேலதிகம் எனக்காட்டி அவ்வூரவர்களை திருமலை மாவட்டத்துக்கு இடமாற்றும் அதிகாரிகளின் திருகுதா ளத்தை சுயநல மூடிக்குள் ஏன் அடக்கப்பார்க்கிரீர்கள். உங்களுக்குத் தெரியுமா இந்த இடமாற்ற காலத்திலேயே புதிய நியமனத்தொடு வெளியார் சிலர் சம்மாந்துறைக்கு நியமனத்தொடு வந்துள்ளனர்.

    Reply : 0       0

    Riyal Tuesday, 21 June 2011 05:29 PM

    கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மிகவும் திறமை சாலிகளாக இருப்பதனை தாங்க முடியாத சக்திகளின் தீய எண்ணமே இந்த ஆசிரியர் இடம் மாற்றத்துக்கான முக்கிய காரணம் ...

    Reply : 0       0

    farsin Tuesday, 21 June 2011 05:46 PM

    அவசரப்படுவது ஆளுனரல்ல.

    Reply : 0       0

    mani Tuesday, 21 June 2011 07:45 PM

    தயவுசெய்து இன ரீதியான சாயம் பூச வேண்டாம். அரசாங்க ஊழியர்கள் எல்லோரும் இடமட்ட சட்டங்களுக்கு கட்டுபட்டவர்கள் தானே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

6 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

6 hours ago - 0     - 6

மன்னிப்பு

6 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

6 hours ago - 0     - 5