2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'தென்கிழக்கு பல்கலையின் ஸ்தாபக உப வேந்தர் கௌரவிக்கப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்'

Super User   / 2012 மே 18 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழாவில் அதன் ஸ்தாபக உப வேந்தரான பேராசிரியர் எம்.எல்.ஏ.காதருக்கு இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்படுவதையிட்டு அப்பல்கலைக் கழகத்தின் ஸ்தாபக முன்னோடிகளுள் ஒருவன் என்ற ரீதியில் நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"அன்று ஒலுவிலில் பற்றைக்காடு நிறைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த அரிசி ஆலை கட்டிடமொன்றில் மறைந்த தலைவர் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தார்.

இதன்போது மிகத்துணிச்சலுடன் உப வேந்தராக பதவியேற்ற பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் இரவு பகலாக வியர்வை சிந்தி முழுமூச்சாக உழைத்ததன் பிரதி பலனாகவே இன்று மூவின மாணவர்களும் உயர் கல்வி கற்கின்ற சகல வசதிகளும் கொண்ட ஒரு தேசிய பல்கலைக்கழகமாக அது தலை நிமிர்ந்து நிற்கிறது.

உண்மையில் அன்று யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக மாறிய போது எமது முஸ்லிம் பகுதியில் பல்கலைக் கழகம் ஒன்றின் அவசியத் தேவையை உணர்ந்து கொண்ட நான், எனது தலைமையில் இயங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தையும் கிழக்குப் பல்கலைக் கழக முஸ்லிம் மாணவர்களையும் அணி திரட்டி தொடர்ச்சியாக போராடியதன் பயனாகவே மறைந்த தலைவர் அஷ்ரப் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஸ்தாபிப்பதற்கு சந்திரிகா அரசில் தனக்கிருந்த முழு அரசியல் பலத்தையும் பயன்படுத்தி - மிகவும் விவேகத்துடன் தீவிரமாக செயற்பட்டு வெற்றியும் கண்டார்.

இப்படி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் தலைவர் அஷ்ரபுடன் இணைந்து முக்கிய பங்காற்றியதாலும் அதனைத் தொடர்ந்து இப்பல்கலையின் வளங்கள் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தியில் பல்கலை நிர்வாகத்தினர் மற்றும் உப வேந்தர் பேராசிரியர் காதர் ஆகியோருடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவன் என்ற ரீதியிலும் குறிப்பாக நான் ஒரு மாணவனாக இருந்தும் கூட அந்த உப வேந்தரின் செயலாளர் போன்று அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்றவன் என்ற ரீதியிலும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியும் அதில் பேராசிரியர் காதரின் காத்திரமான செயற்பாடுகள் குறித்தும் நான் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளேன்.

அது தவிர மறைந்த தலைவர் அஷ்ரப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவரான பேராசிரியர் எஸ்.திலகரட்னவிடம் தென் கிழக்கு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பான அவரது இணைப்பாளராக என்னை அறிமுகப்படுத்தி எனது பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதனால் பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் உப வேந்தர் பேராசிரியர் காதருடன் கூட்டிணைந்து செயற்பட்டதன் மூலம் அறிவு ஆற்றல் ஆளுமை மற்றும் அனுபவங்களை நேரடியாக கண்டு வியந்துள்ளேன். 

பேராசிரியர் எம்.எல்.ஏ.காதரை பொறுத்தளவில் அவர் மாணவர்களுக்கு மாணவராகவும் விரிவுரையாளர்களுக்கு விரிவுரையாளராகவும் ஊழியர்களுக்கு ஊழியராகவும் நிர்வாகத்தினருக்கு சிறந்த நிர்வாகியாகவும் நட்புடன் பழகி இப்பல்கலைக்கழகத்தை தனது கடின உழைப்பினால் குறுகிய காலத்திற்குள் கட்டியெழுப்பி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு தேசிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி தந்து விட்டே ஓய்வு பெற்று சென்றார்.

அன்று அவரது தூரநோக்கு சிந்தனையால் பெற்றுக்கொள்ளப்பட்ட பேராசிரியர் ஆளணியே இன்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து வருகிறது என்றால் அவரது செயற்பாட்டின் வலிமையையே எமக்கு அடுத்துக் காட்டுகிறது. அதே போன்று தற்போதைய உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அன்று ரஷ்யாவில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்து விட்டு இப்பல்கலைக் கழகத்திற்கு வந்தபோது பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவரை சிரேஷ்ட விரிவுரையாளராக நியமித்தது மட்டுமல்லாமல், பின்னர் அவரது திறமைகளை இனம்கண்டு வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதியாகவும் நியமித்தார்.    

அன்று சவால்களை முறியடித்து அந்த நியமனத்தை உப வேந்தர் காதர் வழங்கி இருக்காவிட்டால் இன்று கலாநிதி இஸ்மாயில் உப வேந்தர் பதவியை வகிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கமாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் தகுதி, திறமை மற்றும் ஆற்றல்களுக்கு மதிப்பளித்து அவருக்கு உரிய இடத்தை வழங்கி அவரை பல்கலைக்கழகத்திற்கும் சமூகத்திற்கும் பயன்மிக்க பிரஜையாக உருவாக்கி விடுவதில் பேராசிரியர் காதர் மிகவும் கச்சிதமாக செயற்பட்டார்.

இவரது இத்தகைய திறமைகளையும் சமூகப் பற்றையும் ராஜதந்திர - தூரநோக்கு சிந்தனைகளையும் நன்கு இனங்கண்டு கொண்ட தலைவர் அஷ்ரப் தான் மரணிப்பதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் பேராசிரியர் காதரை  தமது கட்சியில் இணைந்து - அரசியல் செயற்பாட்டில் பங்கேற்குமாறும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் போது இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளில் தற்போதைய தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில் அவருடன் இணைந்து  பேராசிரியர் காதரும் அப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று சமூகத்திற்காக உரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். 

பேராசிரியர் காதர் அவர்கள் 1980களில் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளராக கடமையாற்றிய போதே முஸ்லிம்களுக்கு ஓர் அரசியல் கட்சி அவசியம் என்ற கருத்தை துணிகரமாக வலியுறுத்தினார்.

இப்படி ஒரு கருத்தை முதன்முதலாக முன்வைத்த ஒரு புத்திஜீவி என்ற பெருமையை இந்த கல்விமானே பெற்றுள்ளார் என்பதை இங்கு சுட்டுக்காட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இவை தவிர அவர் ஓய்வு பெற்ற பின்னரும் கூட இறைவனால் தனக்களிக்கப்பட்ட கல்வி, அனுபவம் மற்றும் தேகாரோக்கியம் என்பவற்றை சமூகத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்கின்ற அவாவுடன் கடந்த பல வருடங்களாக கல்வி மற்றும் சமூக விடயங்களில் கூடிய அக்கறையுடன் அதிகபட்ச செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதைக் கண்டு நாம் புளகாங்கிதம் அடைகின்றோம்.

பேராசிரியரின் சேவைகளுள் ஓர் அங்கமாக வறிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவ வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் 'தலைவர் அஷ்ரப் கல்வி நிறுவகம்' என்ற நிறுவனத்தை உருவாக்கி அதை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார். அதன் மூலம் இன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

அது மாத்திரமல்லாமல் எமது சமூகத்தில் தனியார் பல்கலைக்கழகமும் இருக்க வேண்டும் என்ற அவரது தூரநோக்கு சிந்தனையின் வெளிப்பாடாக அவரது வேண்டுதலும் தூண்டுதலும் உத்வேகமும் எமக்கு இருந்ததன் காரணமாகவே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நான் கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தை ஸ்தாபித்து இன்று அவரது சிறந்த வழிகாட்டலுடன் எமது பிரதேசத்தில் அது சிறப்பாக இயங்கி வருகின்றது.

அதேவேளை இலங்கையின் முதலாவது முஸ்லிம் அரசியல்துறை பேராசிரியரான இவர் மாத்திரமே முஸ்லிம் சமூகத்தில் இன்றும் அரசியல்துறை பேராசிரியராகத் திகழ்கின்றார் என்றால் அவரது பெறுமானத்தை எடுத்தியம்புவதற்கு வேறு உதாரணங்கள் தேவைப்படாது எனலாம்.

முஸ்லிம் சமூகத்தின் முதுபெரும் கல்விமானாகவும் புத்திஜீவியாகவும் நல்லாசானாகவும் மதிநுட்பத்துடன் கூடிய ஒரு தலைமைத்துவமாகவும் திகழ்கின்ற பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் எம்முடன் சங்கமித்திருப்பதானது எமக்கு தைரியத்தையும் சக்தியையும் தருகின்றது. 

இத்தகைய திறமை, ஆற்றல், ஆளுமை, அனுபவம், தூரநோக்கு சிந்தனை மற்றும் சமூகப்பற்று என அனைத்து சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இலங்கையின் முதலாவதும் ஒரே  ஒரு முஸ்லிம் அரசியல்துறை பேராசிரியரான எமது ஸ்தாபக உபவேந்தர் எம்.எல்.ஏ.காதருக்கு  இப்பல்கலைக்கழகம் காலம் கடந்தாவது கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிப்பதானது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொரு விடயமாகும். அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினரை நான் பெரிதும் பாராட்டுகின்றேன்.        

இப்பல்கலைக்கழகம் அதன் ஸ்தாபகரான மறைந்த தலைவர் அஷ்ரபின் மறைவின் பின்னர் அவருக்கு கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது. எனினும் ஸ்தாபக உபவேந்தர் எம்.எல்.ஏ.காதர் உயிருடன் இருக்கும் போதே கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்க முன்வந்தமையானது மிகவும் போற்றத்தக்கதே" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • rahman Friday, 18 May 2012 08:11 AM

    இப்படி சும்மா அறிக்கை விட்டுக்கிட்டே, பதவிக் காலத்தைக் கழியுங்கோ. பட்டம் கொடுப்பவர்கள் கொடுக்கிறார்கள்.... வாங்கிறவர் வாங்கட்டும். இடையில் உங்களுக்கு என்ன சார். போய் வாக்களிச்சவங்களுக்கு ஏதாவது உருப்படியா செய்யலாமான்று பாருங்க!

    Reply : 0       0

    marutooran Saturday, 19 May 2012 02:15 AM

    மத்தவங்கள புகழ்ந்தா பொறுக்காதே றஹ்மான் உங்களுக்கு. தகுதியானவர்களை வாழ்துறது பெருந்தன்மையப்பா.

    Reply : 0       0

    rahman Monday, 21 May 2012 07:42 AM

    மாகாணசபையில் சம்பளம் எடுத்துக் கொண்டு, மீடியாக்களில் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருப்பதற்காக மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

    இவங்க மக்களுக்கு என்னதான் செய்றாங்க?

    Reply : 0       0

    IBNUABOO Monday, 21 May 2012 04:11 PM

    கலாநிதி காதரை புகழ வந்தவர் அந்த சந்தர்ப்பத்தை நல்லா பயன்படுத்தி தன்னயும் புகழ்ந்து கொன்டார். என்ராலும் பேராசிரியர் காதர் அவர்கள் பற்றிய அறியயாத தகவல்ககளை தந்தார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .