2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக வைத்தியர்கள் போர்க்கொடி

Super User   / 2012 ஜூன் 07 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

அரசியல் தலையீடு மற்றும் செல்வாக்குகளின் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவுவதாக கூறப்படும் சீர்கேடுகளுக்கு எதிராக வைத்தியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தமது குறைகளை இரண்டு வாரத்தினுள் சுகாதார அமைச்சு தீர்க்க வேண்டும் என வைத்தியர்கள் காலக்கெடு விதித்துள்ளனர்.  அவ்வாறில்லாவிடின் எதிர்ப்பு போராட்டத்தை நடத்த நேரிடும் என அவர்கள் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் நளின் ஆரியரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம்.என்.எம்.சுஹைப், செயலாளர் டாக்டர் எம்.எச்.றிஸ்பின், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண நலன்புரி இணைப்பாளர் லதாகரன் மற்றும் டாக்டர் வை.எல்.எம்.யூசுப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக நடைபெறும் நோயாளர் நலனுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் வைத்தியசாலையின் கணக்காளரின் முறைகேடான செயற்பாடுகள் மற்றும் அதிகாரிகளின் செயலற்ற தன்மை எனும் குறைபாடுகள் இங்கு காணப்படுவதாக டாக்டர் நளின் ஆரியரத்ன குற்றஞ்சாட்டினார்.

இவை அரசியல் அழுத்தம் மற்றும் செல்வாக்கு காரணமாக உண்டானவை என்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காதுவிடின் வைத்தியர்கள் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலிருந்து விலகிச் செல்வதை தடுக்க முடியாது போகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் சதியில் வைத்தியசாலையில் கணக்காளர் விழுந்;துவிட்டார் எனவும் தற்போதைய மருத்துவ அத்தியட்சகரின் நிர்வாகத்தில் இந்த வைத்தியசாலையின் நற்பெயரையும் மதிப்பையும் கெடுக்கும் வகையில் அவர் அரசியல்வாதியின் கைப்பொம்மையாகிவிட்டார்.

வைத்தியசாலையில் அன்றாட அலுவலர்களுக்கு இடையூறு விளைகிறார். அத்துடன்வைத்தியசாலை நிதிச் செயற்பாடுகளை பாடாவதியாக்கிவிட்டதாகவும்' அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்தியாவசியமான உயிர் காக்கும் அவசர தேவை மருந்துகள், நோய் தடுப்பு வக்சீன்கள், குழந்தை பெற்ற தாய்க்கான ஊசிகள், சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகள் என்பவற்றை கொள்வனவு செய்ய கணக்காளர் அனுமதி மறுத்து வருவதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் உருவாகுவதாக படுவதாக டாக்டர் நளின் ஆரியரத்ன விளக்கினார்.

கணக்காளர் நிர்வாக சேவைக்கு மாறான வகையில் தனக்கென தனியான வரவு இடாப்பை வைத்துக்கொண்டு முறையற்ற விடுமுறை எடுப்பதாகவும் மாற்று ஒழுங்குகளை செய்வதில்லை எனவும் இதனால் பல நிர்வாக சிக்கல்கள் ஏற்படுவதாகும் அவர் குறிப்பிட்டார்.

கணக்கு அறிக்கை சமர்ப்பிக்க தவறியமை, ஊழியர்களின் கடன்கள் தாமதித்தல் என்பவை காரணமாக நிதி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாது கிடப்பதாகவும் டாக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

பிரதேச கேள்வி சபையின் உயர் எல்லையானது ஐந்து மில்லியன் ரூபாவாக உள்ள போதும் கணக்காளர் ஐந்து இலட்சத்திற்கு மேலான கேள்வி பத்திரங்களை அனுமதிப்பதில்லை எனவும் அவர் கூறினார்.

'குறித்த அரசியல்வாதியின் சகோதரருக்கு உரிமையான எரிபொருள் நிலையம் பத்து கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ளது. எனினும் ஒரு கிலோ மீற்றர் தூரத்தினுள் சுமார் 10 மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படும் போது, அரசியல்வாதியின் சகோதரனின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பவே கணக்காளர் அனுமதி வழங்குகின்றார்.

இது அரசியல்வாதியின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதனால் கணக்காளர் எவ்வாறு நிதியை துஷ்;ப்பிரயோகம் செய்யாது வீணடிக்கின்றார் என்பதை புலப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த அரசியல்வாதியின் ஓர் ஆதரவாளரே வைத்தியசாலையில் ஒரு சிற்றுண்டிசாலையை நடத்தி வருகின்றார். இதற்கான மாதாந்த மின் கட்டணமாக சுமார் 25,000 ரூபா வரவேண்டிய நிலையில் சுமார் 5,000 – 7,000 ரூபா வரையிலேயே மின் கட்டணமுள்ளது. இது வைத்தியசாலையின் மின் இணைப்பிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெறப்படுகின்றமை தான் சாத்தியமாகின்றது என தெரிவித்தார்.

இது விடயங்கள் தொடர்பாக நடந்த பல விசாரணைகளின் அடிப்படையில் கணக்காளரின் சம்பளம் நிறுத்தப்பட்டதுடன் அமைச்சு அதிகாரிகள் இவரை வேலை நிறுத்தம் செய்யுமாறு சிபாரிசு செய்தனர். இருப்பினும் அரசியல் செல்வாக்கு காரணமாக உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 07 June 2012 02:30 AM

    மர்ஹூம் தலைவரின் பெயர் கொண்ட இந்த ஆசுபத்திரியின் அபிவிருத்தியில், மு.கா.வினது வாக்கு வங்கி கோட்டையான அம்மக்களினால் தெரிவு செய்யப்பட்ட எம்.பி. முட்டுகட்டையாக இருப்பது அப்பிரதேச மக்களுக்கு செய்யும் படுபாதக செயல்தானே? இவ் விடயமாக அவ்வூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் (அவரும் ஒரு டாக்டர்)தலைமையில் அவ்வைத்தியசாலை வைத்தியர்களின் குழு ஒன்று கடந்த வருடம் நீதி அமைச்சர் ஹக்கீமை சந்தித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. வைத்தியர்களே நோயாளர்கள் பாதிப்படையா வண்ணம் உங்கள் போராட்டத்தை முன்னெடுங்கள்.

    Reply : 0       0

    ummpa Thursday, 07 June 2012 03:39 AM

    மக்களே ! நீங்கள் போட்ட வாக்கு இன்று குடும்ம்ப ஆதிக்கம் செலுத்தும்போது நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதா! இப்போதுதான் விளங்குகிறது இப்படியான மருந்துகளுக்கு வழமையாக பொதுமக்கள் வேண்டிக்கொடுப்பதும் அப்படி இல்லாவிட்டால் அதக்கு பணம் செலுத்துவதும் நடைபெற்றுவந்தது. அப்போதெல்லாம் அரசாங்கத்தை பிழை கூறிவிடுவோம். ஆனால் இப்போது விளங்குகிறது என்ன நடக்கிறது என்று. எனவே நமது ஆஸ்பத்திரி முறையாக இருக்கவேண்டுமானால் மக்கள் வீதிக்கு வருவதை தடுக்கமுடியாது ?

    Reply : 0       0

    siraj Thursday, 07 June 2012 05:26 AM

    பிள்ளைப் பேறுக்கு சீசரியன் என்று வரும் எத்தனை பெண்கள் உங்கட வைத்திய சாலையில் உயிரை விடும் சீர்கேடும் நடக்கிறது. இதனை தட்டிக்கேட்டால் உங்களுக்கு பகிஷ்கரிப்பு என்று ஒன்று தேவை.

    Reply : 0       0

    ILM Rizvi - Munaiyan Thursday, 07 June 2012 06:06 AM

    துரித வேகத்தில் நடவடிக்கை எடுக்கா விடின் வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதம் அடையலாம். எமது பிரதேச மக்கள் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்லர்.

    Reply : 0       0

    urankudy Thursday, 07 June 2012 06:32 AM

    இவ் வைத்தியசாலையை பாதுகாப்பது பொதுமக்கள் ஆகிய நமது பொறுப்பு.

    Reply : 0       0

    Rinos Thursday, 07 June 2012 06:37 AM

    சரியாக சொன்னீர்கள்.
    அங்கு ஒரு குடும்ப ஆட்சிதான் இருக்கு. அப்பாவி பொது மக்களுக்குதான் எல்லா சட்டங்களாலும் பிரயோகிக்கபடுகிறது. முதலில் தைரியமான ஒரு டிஎம்ஒ நியமிக்கவேண்டும்.

    Reply : 0       0

    mohamed Thursday, 07 June 2012 08:52 AM

    சிராஜ் எதை கதைப்பது என்ற தெரியாமல் கதைக்கிறார். சிராஜ், தம்மிடம் தரவு எதையும் வைத்துல்லாரா?

    Reply : 0       0

    saif Thursday, 07 June 2012 11:37 AM

    இந்த ஆஸ்பத்திரி தனிப்பட்ட ஒரு நபருக்கோ அல்லது குடும்பத்துக்கோ சொந்தமானது அல்ல.

    Reply : 0       0

    IBNUABOO Thursday, 07 June 2012 11:27 PM

    சர்வாதிகார அரசாங்கத்தை நீக்க மக்கள் உயிரை பணயம் வைத்து போராடுகிறார்கள் முஸ்லிம்கள்.

    Reply : 0       0

    rafeek Friday, 08 June 2012 07:17 AM

    எது எவ்வாராகிலும் மக்கள் பாதிக்கப் படாமல் இருந்தால் சரி
    உன்மையில் எம் பி வைத்தியசாலையில் தலையிடாமல் இருக்குமாறு பொது மக்கள் சார்பாக நான் வேண்டுகிறேன்.

    Reply : 0       0

    pottuvilan Friday, 08 June 2012 07:35 AM

    வைத்தியர்கள் ஏன் அலுவலக நிருவாகத்தில் தலையிட வேண்டும்? எரிபொருள் எங்கு நிரப்பினால் இவர்களுக்கு என்ன.? கரண்ட் பில் பற்றி இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

    Reply : 0       0

    bzukmar Friday, 08 June 2012 06:19 PM

    @பொத்துவிலான் நீங்கள் ஒரு நிறுவன தலைவர் என்றால் உங்களது சொந்த தேவைகளையும், அந்த நிறுவனத்தின் நிதியினை கொண்டுதான் நிறைவேற்றுவீர்களா? பொது நிதி வீண்விரயம் தங்களது அகராதியில் இல்லையா?

    Reply : 0       0

    urankudy Friday, 08 June 2012 09:22 PM

    பொத்துவில்லான்... இவர்கள் கவலைப்படாமல் யார் கவலைப்படுவார்கள்...

    Reply : 0       0

    seelan Monday, 11 June 2012 05:35 AM

    வைத்தியர்களுக்கும் நிதி நிர்வாகத்துக்கும் என்ன தொடர்போ? நீங்கள் மற்றவர்கள் வேலையில் ஏன் மூக்கை நுளைக்கிறீர்கள்.

    Reply : 0       0

    meenavan Monday, 11 June 2012 08:06 AM

    எந்த நிறுவனத்திலும் ஒரு தலைவர் இருப்பார், அவரது வேலைகளை துரிதமாக்களுக்கு நிதி,நிர்வாகம்,வளபங்கீடு,வாகன,சொத்து பராமரிப்பு ஊழியர் நலன்,நோயாளர் உச்ச பராமரிப்பு என பல செயல்பாடுகள் தலைவரின் பொறுப்பு கூறுதலுடன் நிகழ்வது வழமையான நடைமுறை. இதில் நிதி முக்கிய இடம்பெறுகிறது, நிதிக்கு பொறுப்பானவர் பொறுப்பற்ற தன்மையில் நடக்கும்போது வைத்தியசாலையின் சகல பணிகளிலும் அதன் தாக்கம் பரிணமிக்கும்,அதன் பிரதிபலிப்பு நோயாளருக்குரிய மருந்து உரிய நேரத்தில் கிடையாமை....ஊழியர்களின் கொடுப்பனவில் வேன்றுமேன்று செய்யும் தாமதம் அங்கு வேலை செய்யும் சகல ஊழியர்களையும் பாதிப்பது வாஸ்தவமே? இந்நிலையில் அரசியல் செல்வாக்கு காரணமாக நிகழும் அநியாயங்களை தோலுரிக்க பலம் வாய்ந்த வைத்திய சங்க உறுப்பினர்கள் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடு படுவது தவிர்க்க முடியாததுதான். இதனை புரியாமல் வைத்தியர்களுக்கும் நிதி நிர்வாகத்துக்கும் என்ன தொடர்பு ? மற்றவர் வேலையில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என்பதெல்லாம் சிறுபிள்ளை தனமே ஒழிய வேறில்லை.

    Reply : 0       0

    pottuvilan Tuesday, 12 June 2012 07:03 AM

    இங்கு நாம் எல்லோரும் நடைமுறையில் உள்ள ஒரு பிரசினையை புரிந்துகொள்ள வேண்டும்,அநேகமாக நமது பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களிடம் (அநேகமானவர்கள்) நோயாளிகள் கேள்விகள் கேக்க திராணி அற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படியும் கேள்விகள் கேட்டால் மற்ற நோயாளிகள் முன்னிலையில்,என்ன நடக்கும் என்பது,உங்களுக்கும் தெரியும் அனுபவமும் பட்டு இருப்பிர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .