2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

ஆசிரியர் - மாணவர் உறவு : ஒரு புனிதமான பிணைப்பு

Janu   / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புரிதல், நம்பிக்கை மற்றும் நேர்மறையான தகவல்தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு புனிதமான பிணைப்பு ஆசிரியர்-மாணவர் உறவு என்பதாகும். இது வெறும் கல்வி கற்பித்தலைத் தாண்டி, வழிகாட்டுதல், உணர்ச்சிபூர்வமான ஆதரவு, மற்றும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பரஸ்பர மரியாதை மற்றும் கனிவான அணுகுமுறை ஆரோக்கியமான கற்றல் சூழலை உருவாக்கி, மாணவர்களின் கல்வி மற்றும் சமூக சாதனைகளை அதிகரிக்கிறது. 

ஆனால், கொழும்பில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் மாணவ தலைவனுடன், ஆசிரியைகள் நால்வர் உல்லாசமாக இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் உலாவியதை அடுத்து, பலரையும் முகஞ்சுளிக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், பாடசாலையின் பெயர், ஆசிரியைகள் மற்றும் மாணவனின் முகங்கள் தெட்டத்தெளிவாக தெரியும் வகையிலும், இன்னும் சில சமூக வலைத்தளங்களில் முகங்களை மறைத்தும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. வெறுமனே கட்டுக்கதைகளை புனைய முடியாது. ஏதோவொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆகையால் விசாரணைகள் முடியும் வரையிலும் யாரை நோக்கியும் யாரும் விரல் நீட்டமுடியாது.

எனினும், சமூக வலைத்தளங்களில் எவ்விதமான அடக்க ஒடுக்கமும் இன்றி, மிகச்சரியாக யூகித்துக்கொள்ளும் வகையில், இன்றேல், முழு விபரங்களுடன் படங்கள் தரவேற்றப்பட்டுள்ளன. அதிலிருக்கும் பெண்களின் படங்களில் சில தவறானவை எனவும் பதிவிட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையின் மாணவத் தலைவருக்கும் அந்தப் பாடசாலையின் பல பெண் ஆசிரியைகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் அந்த உறவின் வீடியோ காட்சிகள் சமூகத்தில் எவ்வளவு சோகம் மற்றும் சமூக சீரழிவு உள்ளது என்பதைக் காட்டுகின்றன என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குடிமக்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து சுய கட்டுப்பாடு இல்லையென்றால், இது தொடர்பாக அரசாங்கம் சில ஒழுங்குமுறை பொறிமுறையை பின்பற்ற வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

புகைப்படங்களை அப்பட்டமாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தவறே செய்யாவிட்டாலும் அந்த நபர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்படக்கூடும். தவறான முடிவை எடுப்பதற்கு தூண்டுவதாகவும் அமையலாம். ஆகையால்,  ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் அவசியம் நிறைவேற்றப்படவேண்டும். அத்துடன், இந்த சம்பவத்துக்கு உரிய விசாரணை நடத்தப்படவேண்டும்.  

 29.01.2026 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X