Janu / 2026 மே 10 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த பெப்ரவரி 28 முதல் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. எங்கோ ஒரு மூலையில் நடக்கும் இந்தப் புவிசார் அரசியல் மோதல்கள், இலங்கையில் வாழும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அண்மைய எரிபொருள் விலை உயர்வு, பாடசாலை போக்குவரத்துத் துறையை வெகுவாகப் பாதித்துள்ளது.
ஏற்கனவே அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் திணறிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு, பாடசாலை வாகனக் கட்டண உயர்வு மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை உயர்வைக் காரணம் காட்டி, அனைத்து இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கமானது, மே மாதம் முதல் கட்டணங்களை 12 சதவீதத்தால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு 105 ரூபாவினால் அதிகரித்திருந்த போதிலும், டயர்கள், மசகு எண்ணெய், மின்கலங்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகளின் கடும் உயர்வு காரணமாகவே இந்தக் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாததாகியுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான மோதல்கள் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கின்றன. ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் உலக நாடுகளுக்குப் பாடம் புகட்ட 'ஹோமுஸ்' நீரிணையை மூடியது. உலகின் மிகப்பலவாய்ந்த படைகளால்கூட இந்த நீரிணையைத் திறக்க முடியவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அங்கு சிக்கியுள்ள கப்பல்களை மீட்க 'புராஜெக்ட் ஃப்ரீடம்' என்ற இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினாலும், அது வெற்றியளிக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தற்காலிகப் போர்நிறுத்தம் நிலவினாலும், கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 114 டொலராக உயர்ந்து பின் சற்றுத் தணிந்துள்ளது.
இந்த நெருக்கடியானது போக்குவரத்துத் துறையை மட்டுமன்றி, நாட்டின் முதுகெலும்பான விவசாயத் துறையையும் விட்டுவைக்கவில்லை. சர்வதேச வல்லரசுகளின் அதிகாரப் போட்டியால், இலங்கையின் சாதாரண குடிமகன் பசியையும் பட்டினியையும் எதிர்நோக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. உரப் பற்றாக்குறையினால் விளைச்சல் குறைந்து உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உலக அளவில் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 'ஆக்ஸ்பாம்' போன்ற நிறுவனங்கள் எச்சரிக்கும் நிலையில், ஹோமுஸ் நீரிணை போன்ற அரசியல் விளையாட்டுகள் இலங்கையின் ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கின்றன. இந்த அதிகாரப் போட்டி எப்போது முடிவுக்கு வரும்? சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திற்கு எப்போது விடிவு கிடைக்கும்? என்பதே இன்றைய பிரதான கேள்வியாகும்.
18 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago