2026 மார்ச் 11, புதன்கிழமை

டிரம்ப் - எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

Editorial   / 2026 மார்ச் 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


  அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National Mall) பகுதியில்,  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் சர்ச்சைக்குரிய சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 உலகப்புகழ் பெற்ற 'டைட்டானிக்' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜாக் மற்றும் ரோஸ் கப்பலின் முன்பகுதியில் நிற்பது போன்ற அதே பாணியில், டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி இருக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் கீழ், "டைட்டானிக் படத்தில் ஜாக்கும், ரோசும் இணைந்திருந்தது போல, டிரம்பும், எப்ஸ்டீனும் பிரிக்க முடியாத நண்பர்களாக இருந்தனர்" என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

  'சீக்ரெட் ஹேண்டஷேக்' (Secret Handshake) என்ற கலைஞர் குழுவினர் இந்தச் சிலையை நிறுவியுள்ளனர். சமீபத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்டது. அதில் டிரம்ப் உட்பட பல உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் அடிபட்டன. இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தச் சிலை ஒரு முக்கிய அரசியல் விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.

 வாஷிங்டன் நகரத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருவதுடன், அதன் முன்னால் நின்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இணையதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

  ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் ஏற்கனவே பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோர் சிக்கி, கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர். அதேபோன்றதொரு விசாரணை மற்றும் நடவடிக்கை டிரம்பிற்கு எதிராகவும் பாய வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தும் விதமாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .