2026 மார்ச் 18, புதன்கிழமை

ட்ரம்ப் மீது பாய்ந்தது அமெரிக்க உளவுத்துறை

Editorial   / 2026 மார்ச் 17 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈரானின் பதிலடி தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அவருக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்கள் தமக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று (மார்ச் 16) இருமுறை தெரிவித்தார்.
 

வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “ஈரான் மத்திய கிழக்கில் உள்ள மற்ற அனைத்து நாடுகளையும் குறிவைத்துத் தாக்க முற்பட்டிருக்கக் கூடாது. இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்" என்றார்.
 

இந்த சூழலில், அமெரிக்க உளவுத்துறை தரப்பில் வெளியான தகவல்களில், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் முற்படக்கூடும் என ட்ரம்ப்புக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தூண்டக்கூடும் என்றும், குறிப்பாக வளைகுடா நாடுகள் அமெரிக்கத் தாக்குதல்களை அங்கீகரிப்பதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ ஈரான் கருதினால், அந்நாடுகளின் தலைநகரங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்று போருக்கு முன்னரே ட்ரம்ப்புக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்ததாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
 

மேலும், அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்னதாகவே, இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதல்கள் மூலம் ஈரானிய தலைவர்களைக் கொல்ல முயல்வது, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மற்றும் தூதரகத் தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்தது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஈரான் மீது பிப்ரவரி 28-ல் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக கடந்த இரண்டு வாரங்களாக, ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கியுள்ளன. 

அதேபோல, உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் அனைத்து கப்பல் போக்குவரத்தையும் ஈரான் நிறுத்தியுள்ளது; இதனால் உலகளாவிய எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X