2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

’’போரை நியாயப்படுத்த இயேசுவைப் பயன்படுத்தாதீர்கள்’’

Lenin Raj   / 2026 மார்ச் 30 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈரான்
போர் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், போர் நடவடிக்கைகளை கடவுள் நியாயப்படுத்துகிறார் என்ற வாதத்தை பாப்பரசர் 14-ஆம் லியோ நிராகரித்துள்ளார்.

குருத்தோலை ஞாயிறு திருப்பலியை முன்னிட்டு செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், எந்தவொரு போர் நடவடிக்கைக்கும் இயேசுவை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார்.

"சகோதர சகோதரிகளே, நமது கடவுளாகிய இயேசு அமைதியின் அரசர். அவர் போரை நிராகரிக்கிறார். போரை நியாயப்படுத்த அவரை எவரும் பயன்படுத்த முடியாது. போரிடுபவர்களின் பிரார்த்தனைகளை அவர் செவிமடுப்பதில்லை. மாறாக, 'நீங்கள் எத்தனை முறை மன்றாடினாலும் நான் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் இரத்தத்தால் நிறைந்துள்ளன' என்ற பைபிள் வசனத்தின்படி அவர்களை அவர் நிராகரிக்கிறார்."

அமெரிக்காவில் பிறந்த முதல் பாப்பரசரான இவர், எந்தவொரு உலகத் தலைவரின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. எனினும், அண்மைக்காலமாக ஈரானில் நடைபெற்று வரும் போர் குறித்துத் தனது கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார்.

மத்திய கிழக்கில் தற்போதைய மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்காகத் தான் பிரார்த்தனை செய்வதாகவும், இக்கட்டான சூழலில் அவர்களால் புனித நாட்களின் வழிபாடுகளை முழுமையாக முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

அத்துடன், உடனடியாகப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் அவர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். விமானத் தாக்குதல்களைக் கடுமையாகச் சாடிய பாப்பரசர், "விமானங்கள் எப்போதும் அமைதியைச் சுமந்து வருபவையாக இருக்க வேண்டுமே தவிர, போரைச் சுமப்பவையாக இருக்கக் கூடாது. வானத்திலிருந்து அழிவும் மரணமும் வரும் என்று எவரும் அஞ்சும் நிலை ஏற்படக்கூடாது" எனத் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களைப் பாதுகாப்பதற்காகச் சில அமெரிக்க அதிகாரிகள் கிறிஸ்தவ மதக் கருத்துக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த புதன்கிழமை பென்டகனில் நடைபெற்ற வழிபாட்டின் போது, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டிருந்த பின்னணியில் பாப்பரசரின் இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .