
-மாணிக்கப்போடி சசிகுமார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை விரிவுபடுத்துவதுடன் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தையும் அமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இவ் விடயமாக ஆராய்வதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அடங்கிய குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினர் மற்றும் அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மட்டக்களப்பு கல்வி வலய வலக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சகட்கரவர்த்தி ஆகியோருடன் கலந்தரையாடியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிசங்க ரணதுங்க தலைமையிலான குழுவினரே இவ் விஜயத்தை மேற்கொண்டதுடன் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடியதுடன் திராய்மடுவில் கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான இடத்தினையும் பார்வையிட்டுள்ளனர்.
இவ் விஜயத்தின் போது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பில் இருந்து இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கு ஐடா என்ற சிறந்த வீராங்கனை தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று ஆண்களிலும் திறமையானவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கான சரியான களத்தை அமைத்துக் கொடுப்பதனூடாக நாட்டிற்கு சிறந்த வீரர்களை உருவாக்க முடியும்.
அதனால் மட்டக்களப்பில் கிரிக்கெட் விளையாட்டினை விரிவுபடுத்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை தீர்மானித்துள்ளது. இதேவேளை மட்டக்களப்பில் கிரிக்கெட் மைதானம் ஒன்றையும் அமைக்கவுள்ளோம். அது தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமாகவே இன்று அமைந்தது எனத் தெரிவித்தார்.