
அண்மையில் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 30ஆவது வருடாந்த வர்த்தக மெய்வல்லுநர் போட்டியில் 286 புள்ளிகளை பெற்று தொடர்ந்து இரண்டாவது தடவையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. மேலும் 278 புள்ளிகளுடன் ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி இரண்டாம் இடத்தையும், 243 புள்ளிகளுடன் மாஸ் ஹோல்டிங்ஸ் மூன்றாமிடத்தையும் பெற்றன. இந் நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்வானது சிபிஎல் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகே தலைமையின் கீழ் இடம்பெற்றது.
'இரண்டு தினங்களினுள் 23 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்ட இந்த போட்டிக்கு தொடர்ச்சியாக நான்காவது வருடமாக ரிட்ஸ்பரி அனுசரணை வழங்கியதையிட்டு நாம் பெருமையடைகிறோம். தத்தமது நிறுவனங்களுக்கு பெருமை சேர்த்திடும் வகையில் ஒவ்வொரு போட்டியாளரும் முழு ஆர்வத்துடனும் போட்டியிட்டமையானது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ரிட்ஸ்பரி ஆனது, நாடுமுழுவதும் உள்ள மெய்வல்லுநர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன், வர்த்தக மெய்வல்லுநர் சங்கத்துடனான எமது பங்காண்மையை தொடர எண்ணியுள்ளோம்' என CBL இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், குழும் பணிப்பாளருமான நந்தன விக்ரமகே தெரிவித்தார்.