Freelancer / 2023 ஜனவரி 25 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ ஹுஸைன்
பக்கச்சார்பு இல்லாத பல்லினத்துவத்தை, பல்லுயிர்த் தன்மையை அங்கிகரித்து மதிப்பளித்து, அவற்றை வாழ வைக்கும் நெறிமுறையை, இளம் சமுதாயத்தினர் வளப்படுத்த வேண்டும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கள ஒருங்கிணைப்பாளர் எம். பிரதீபன் தெரிவித்தார்.
‘பிரஜைகளின் அபிலாஷைகளை இனம்கண்டு அவற்றுக்கு மாற்றுத் தீர்வு காணக் கூடிய வழிவகைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் இளம் ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கும் செயலமர்வு’ மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் அமைப்பின் மண்டபத்தில் திங்கள்கிழமை (23) நடைபெற்ற இந்தப் பயிற்சி நெறிக்கு, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சமூக வலைத்தளப் பதிவர்களான இளம் ஆக்கபூர்வப் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
கள ஒருங்கிணைப்பாளர் பிரதீபன் மேலும் தெரிவித்ததாவது; மனிதநேயம் மிக்க ஒரு சமூகத்தை வடிவமைப்பதில், இளம் உடகவியலாளர்களின் பங்கும் பணியும் காத்திரமானது. அதற்காக இளம் ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் மூலமாக பல்லினத்துவத்தை அங்கிகரித்து, மதிப்பளிக்கும் ஊடகவியல் துறைக்கு உயிர்ப்பூட்ட வேண்டும்.
துரதிர்ஷ்ட வசமாக இலங்கையின் கல்வி முறைமையில் இந்த அணுகுமுறைகள் இல்லை. அதை இதுபோன்ற பயிற்சி நெறிகள், தேடல் அறிவுகள் மூலம் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்ளலாம். இலங்கை சமுதாயத்தினரை அவர்கள் எந்த இனம், மதம், சாதி, மொழி என்றில்லாமல் வாழ வைக்கும் ஆக்கபூர்வ அபிவிருத்திப் பங்காளர்களாக மாற்ற வேண்டும். இந்த நோக்கத்தை அடைய, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உங்களுக்குக் கை கொடுக்கும் என்றார்.
இந்தப் பயிற்சி நெறியில் ஊடகம், திரைத்துறை, ஒளிப்பதிவு போன்றவற்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் நடராஜா மணிவாணன் உட்பட இன்னும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .