2026 மார்ச் 14, சனிக்கிழமை

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: 21ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

Editorial   / 2025 ஜூலை 13 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். எம். நூர்தீன் 

நகர்த்தல் பத்திரம் மூலம் வெள்ளிக்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு, எதிர்வரும்  21ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புனித ஹஜ் கடமையை நிறைவு செய்துவிட்டு 1990.07.12ந் திகதி அன்று வீடு திரும்பிய காத்தான்குடியை சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் கடந்த 2014 ஆம் ஆண்டு  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.   

 சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நீதவான் கட்டளையிட்டிருந்தார்.

அதனடிப்படையில் நில அளவைத் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், தொல்லியல் திணைக்களம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தடயவியல் மருத்துவம்  என்பது தமது ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாகச் சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முடிவுறுத்தி நீதிமன்றுக்கு திட்ட வரைபையும் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில், நீதி மன்றுக்கு சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில்  சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனை  நீதிமன்றுக்கு அறிவிப்பதற்கு தவணையொன்றை வழங்குமாறு  மன்றுக்குத் தெரிவித்திருந்தனர்.

அதன் பிரகாரம், 04.10.2020 இல் சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளர் அறிவுறுத்தலுக்கு அமைவாக 11.07.2025 ஆந் திகதி ஆகிய வெள்ளிக்கிழமை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கானது திறந்த மன்றில் அழைக்கப்பட்டது. 

இதன்போது முறைப்பாட்டாளர் அப்துல் அப்துர் ரஊப் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தை  மிக நுணுக்கமாக ஆராய்ந்த நீதிமன்றமானது  குறித்த வழக்கை எதிர்வரும் 21.07.2025 க்கு தவணை போடுவதாகவும் குறித்த தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு,  சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

குறித்த இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் அப்துர் ரஊப் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான முஹைமீன் காலித் , முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் மன்றில் ஆஜராகி  இருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X