2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

’தீர்வுகாண்பதற்கு சம்பந்தனும் நானும் பணியாற்றினோம்’

Freelancer   / 2024 ஜூலை 07 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆர். சம்பந்தனுடன் உடன்பாட்டுடன் முன்நோக்கி கொண்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த ஆர். இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள், இன்று (07) பிற்பகல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

ஆர். சம்பந்தனின் மரணம் தொடர்பில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஜனாதிபதி, அவரது மறைவு நீண்டகால நண்பரின் இழப்பு எனவும் குறிப்பிட்டார்.

ஆர். சம்பந்தன் எப்பொழுதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது பாராளுமன்றத்தில் சமர்பிக்க தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வனவளத் திணைக்களத்துடன் இருக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக தீர்க்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தனின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாற்றுப் பிரதமர் என்று குறிப்பிட்டதுடன், ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, உண்மையான எதிர்க்கட்சித் தலைவரின் பண்புகளை வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல்கள் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .