2026 பெப்ரவரி 12, வியாழக்கிழமை

பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் எதற்கு?

Janu   / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பலர் தெரிவித்த எதிர்ப்புகளை அடுத்து சட்ட மூலத்தை மீளாய்வு செய்து மீண்டும் சமர்ப்பிப்பதற்காகவே அதனை இடைநிறுததுவதாக கூறியுள்ளார்.

ஆயினும் இது முதன் முதலாக தமது அரசாங்கம் முன்வைக்கும்  சட்டமூலமொன்றல்ல என்றும் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ரணில்  விக்ரமசிங்க அரசாங்கம் முன்வைத்த சட்டமூலமொன்றையே தமது அரசாங்கம் முன்வைத்துள்ளது என்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுகின்றனர்.

அதில் ஓரளவு உண்மை இருக்கிறது. இதனையொத்த சட்டமூலமொன்று 2023 ஆம் ஆண்டு ரணில்  விக்ரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்ப்பட்டு இருந்தது என்று சட்டத்தரணி அரித்த விக்ரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பலர் எதிர்ப்பு தெரிவித்த போதும் அரசாங்கம் இவ்வாறே கூறியது. அச்சீர்திருத்தங்கள் முதன்முதலாவதாக  தாம் முன்வைக்கவில்லை என்றும் 2019 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் முன்வைத்த சீர்திருத்தங்களில் சில மாற்றங்களை செய்தே தாம் சமர்ப்பத்ததாகவும் அரசாங்கம் கூறியது. இதுவும் உண்மையே. அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவர்களாக இருந்த தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் அண்மையில் அச்சீர்திருத்தங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய மக்கள் சக்தியினர் அரசாங்கம் புதியதோர் அரசியலமைப்பை கொண்டுவருவதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தனர். இன்னமும் அதனை கூறி வருகின்றனர். அதேவேளை, அந்த புதிய அரசியலமைப்பு 2016 ஆம் ஆண்டு மைத்திரி-ரணில்  அரசாங்கம் ஆரம்பித்த மக்கள் அபிப்பிராயம் ஆராயும் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படும் என்றும் கூறுகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் கோட்டாபய அரசாங்கம் ஆரம்பித்த சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தையும் தொடர்கிறது. 1979 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் அறிமுகப்படுத்திய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதனையும் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். அதேபோல் தாம் எதிர்த்த நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தையும் பயன்படுத்துகின்றனர்.

சமூக முறைமை மாற்றமே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால பிரதான சுலோகமாகியது. எனவே அக்கட்சியின் அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களின் திட்டங்களையே இவ்வாறு தொடர்வதை பலர் விமர்சிக்கின்றனர். அதில் ஓரளவுக்குத் தான் நியாயம் இருக்கிறது. ஏனெனில் முறைமை மாற்றம் என்றால் கடச்த கால அனைத்தையும் மாற்றுவதல்ல. சில நல்லவற்றையும் நிர்ப்பந்தமான விடயங்களையும் அரசாங்கம் தொடர வேண்டிய நிலை ஏற்படலாம்

உதாரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை குறிப்பிடலாம். அந்நிதியம் வல்லரசுகளின் நலன்களை முதன்மையாகக் கொண்ட நிறுவனம் என்றதோர் கருத்தும் நிலவுகிறது. அது முற்றிலும் உண்மையானதல்ல. 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்த நிலைமையில் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காவிட்டால் நாட்டில் பஞ்சம் அதிகரித்து சிலவேளை இரத்தம் சிந்தும் கலவரங்களும் வெடித்திருக்கலாம்.

அன்று கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்நோக்கிய பிரதான பிரச்சினை வெளிநாட்டு செலாவணி கையிருப்பு முற்றாக வற்றிச் சென்றமையேயாகும். அன்று அமைச்சர்கள் கடனுக்கு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு மேற்கு ஆசிய நாடுகளில் அலைந்து திரிந்தனர். எண்ணெய் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் போக்குவரத்து முற்றாக தடைப்படும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக பொருட்களின் விலை மும்மடங்காகவும் நான்கு மடங்காகவும் அதிகரித்தது.

இந்த நிலையில் முதலில் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதை நிராகரித்த கோட்டாபய ராஜபக்ஷ பின்னர் அந்நிதியத்திடம் உதவி கோரினார். அந்நிதியம் அதற்கு இணங்கிய உடனேயே உலக வங்கி இலங்iகைக்கு உதவ முன்வந்தது. நாணய நிதியமும் நான்கு ஆண்டுகளுக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வழங்க முன்வந்தது. அந்த ஒப்பந்தத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முறித்திருந்தால் நாடு மீண்டும் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும்.

எனவே முன்னைய அரசாங்கங்கள் எவ்வளவு தான் ஊழல் மலிந்தவையாக இருந்தாலும் குறிப்பிட்ட ஓர் காலம் வரை அவை ஆரம்பித்த சில விடயங்களை தொட்ரத் தான் வேண்டும். கல்வி சீரதிருத்தங்கள் போன்ற சில நல்ல விடயங்களை அவசியமான மாற்றங்களுடன் நிரந்தரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆனால் பயங்கரவா தடுப்புச்ச சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை அரசாங்கம் ஏன் தொடர வேண்டும்.? பயங்கரவாத தடுப்புச் சட்டமானது 1979 ஆம் ஆண்டிலேயே நிறைவெற்றப்பட்டது. அது ஒரு சற்காலிக சட்டமாகும் என்று அதன் பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அது 47 வருடங்களாக சில மாற்றங்களுடன் இன்னமும் அமுலில் இருக்கிறது.

இலங்கையில் முதன் முதலில் பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரேயாவர். 1971 ஆம் மக்கள் விடுதலை முன்னணி அப்போதைய அரச அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த போது அப்போதைய சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கம் அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பட்டது.

கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் அவர்களை சிறையிலடைத்த குற்றவியல் நீதி ஆணைக்குழச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். எனவே தமிழ் ஆயுதக் குழுக்களை அடக்கும் நோக்குடன் 1979 ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் போது மக்கள் விடுதலை முன்னணி அதனை கடுமையாக எதிர்த்தது.

அந்த எதிர்ப்பு கடந்த 47 வருடங்களில் ஒரு போதும் குறையவில்லை. கடந்த காலங்களில் சர்வதேச நெருக்குவாரங்களின் காரணமாக அச்சட்டத்துக்குப் பதிலாக சர்வதேச தரத்திலான மற்றொரு சட்டம் கொண்டு வரப்படும் என்று முன்னைய அரசாங்கங்கள் தெரிவித்தன. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாற்றுச் சட்டம் தேவையில்லை இருக்கும் சட்டத்தையும் முற்றாக இரத்துச் செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் அதனை பிரதான கட்சியாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியென்ற கூட்டணயும் கூறி வந்துள்ளன.

நடைமுறையில் இருக்கும் ஏனைய சட்டங்கள் குற்றங்களை தடுக்க போதுமானவை என அக்கட்சியின் தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் இன்று தேசிய மக்கள் சக்தியும் பல குற்றங்கள் தொர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அருகம்பேயில் இஸ்ரேலிய உல்லாசப் பிரயாணிகளின் பாதுகாப்புக்கு குந்தகமாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி பெலிசார் இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இஸ்ரேலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முஹமமத் சுஹைல் என்ற 21 வயது மாணவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் ஆனால் 9 மாதங்களுக்குப் பின்னர் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தால் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சில குற்றங்கள் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய பயங்கரவாத தடுப்புச் சட்த்தின் கிழ் மட்டுமே முடியும் எனவே சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் வரை அதன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் கடசிகளின் தலைவர்டகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின் போது குறிப்பிட்டு இருந்தார். புதிய சடட்ம் ஒன்று கொண்டவரப்படும் வரை இருக்கும் சட்டத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது என்று வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத்தும் கூறியிருந்தார்.

ஆயினும் பயங்கரவாத் தடுப்புச் சட்டம் எவ்வளவு மோசமான அடக்குமுறைச் சட்டம் என்பதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு புதிதாக கூறத்தேவையில்லை. எனவே முன்னைய அரசாங்கங்கள் சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி அளித்ததற்கு அமைய சர்வதேச தரத்திலான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்து அரசாங்கம் பயங்கரவாத்தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் முதன் முதலாக ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்கவின் அரசாங்கததால் 2023 ஆம் ஆண்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட போது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் அதன் 53 வாசகங்களில் 31 வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளித்தது. அச்சட்டத்தின் மீதான நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது அந்த 31 வாசகங்களை திருத்துவதஙற்கான பரிந்துரைகளையும் நீதிமன்றம் வழங்கியது.

ஆனால் ரனிலின் அரசாங்கம் அப் பரிந்துரைகளில் சிலவற்றை மட்டும் குழுநிலையின் போது உள்ளடக்கி 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதனை நிறைவேற்றிக் கொண்டது. இதனையும் கடுமையாக எதிர்த்த தேசிய மக்கள் சக்தி கருத்துச் சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கும் இந்தச் சட்டத்தை திருத்துவதாக வாக்குறுதி அளித்தது. இதுவும் அரசாங்கம் மிக எளிதில் செய்யக் கூடிய விடயமாகும்.     

11.02.2026


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .