R.Tharaniya / 2025 நவம்பர் 10 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்திருந்த காலத்திலேயே அவர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்கா மன்னிப்புக்கள் கோரியிருந்தனர்.
அவற்றுக்கான காரணங்களையும் கூறியிருந்தனர். அதை அடையாளம் காண்பதில் தவறுகள் நிகழ்ந்தனவா? அதே நேரத்தில், பிராயச் சித்தங்களையும் செய்திருந்தனர் என்றே கொள்ள வேண்டும். ஆனால், அரசாங்கமோ, ஏனைய தரப்புகளோ தங்களால் கவனமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக கூட இதுவரை மன்னிப்புக் கோரவில்லை.
அதற்குப் பதிலாக நியாயப்படுத்தல்களை செய்து வருகின்றனர். அத்துடன், மூடி மறைக்க முயல்கின்றனர். மௌனமாக இருந்திருக்கின்றனர். இந்த நேரத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழர்களின் மன்னிப்புக் கோரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கும்
இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால் அமைதிப்படையாக நாட்டுக்குள் வந்த இந்திய இராணுவம் வடக்கு - கிழக்கில் மேற்கொண்ட அட்டூழியங்கள் கணக்கிலடங்காதவை.
அவை தொடர்பில் இந்திய அரசாங்கம் மன்னிப்பு கோருவதை விடுத்து மீண்டும் வடக்கு கிழக்குக்கு இராணுவத்தை அனுப்பி இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யவே ராஜீவ் காந்தி திட்டமிட்டிருந்தார்.
அதனால் அவர் தமிழ்நாட்டின் சிறிபெரும்புத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது, விபரீதம் நிகழ்ந்தது.நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரபாகரன் அது ஒரு துன்பியல் சம்பவம் எனக் கூறியிருந்தார்.
இந்தப் பதிலை அதற்கான மன்னிப்புக் கோரலாகவே அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனலாம்.விடுதலைப் புலிகள் சகோதர இயக்கங்கள் மீதான விரோத, எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த காலங்களில் சகோதரப் படுகொலைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் பல கொடுமைகளும் நிகழ்ந்தன. ஆனால்,
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கொள்கையுடன் இருந்த சகோதர இயக்கங்கள், அமைப்புகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.
அந்தக் கூட்டமைப்பினை தமிழ் மக்களின் அரசியல் தரப்பாகவும் வெளிப்படுத்தியிருந்தனர். அந்தக் கூட்டமைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி கவனமாகத் திட்டமிட்டுக் குலைத்து விட்டிருப்பது வேறு கதை. அதன் பின்னர் முஸ்லிம் மக்கள் தொடர்பான விடயத்தில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து.
இருந்த பிரச்சினைகள், குழப்பங்கள், தவறுகளுக்காகச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேச்சுக்களை நடத்தி உடன்பாடுகளை ஏற்படுத்தி அதற்கான பரிகார நடவடிக்கைகள் எடுத்திருந்தார்.
இப்போது வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை தூக்கிப்பிடித்து பெரிதாக்கி நாட்டில் இருக்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவு நிலையினைக் குழப்பி நல்லிணக்கத்திற்குப் பங்கத்தினை ஏற்படுத்த முனையும் சிலர் தேவையானவற்றை விடுத்து வேறு விடயங்களைத் தூக்கிப்பிடித்து பிழைகளை மூடி மறைக்க முனைவதாக சொல்லாம்.
இலங்கை அரசாங்கங்களைப் பொறுத்தவரையில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் தங்களது பிழைகள் குறித்து எந்த இடத்திலும் மன்னிப்புக் கோரவில்லை. அதே நேரத்தில், அதற்கான நியப்படுத்தல்களையும் மூடி மறைத்தல்களையுமே மேற்கொண்டு வந்திருக்கிறது.
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தங்களுக்கான சுயநிர்ணய உரிமைக்காக
அறம், அகிம்சை, ஆயுதம், இராஜதந்திர ரீதியாக போராடி வருகின்ற இனத்திற்கு
எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற தோரணையில் அரசாங்கம் நடந்து வருகிறது.
இது உண்மையில் பாரபட்சமே. உலகின் அனைத்து நாடுகளும் பாராமுகமாகவும், அறியாத விடயம் போலவும் இருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்புகளும் வெளிப்படுத்தல்கள் மட்டும் காரணமல்ல. அவர்கள் தங்களது நாட்டுக்கான இராஜதந்திர செயற்படுத்தலைச் சிறப்பாக மேற்கொள்கின்றனர் என்பதே முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர்கள் நடைபெறுவதும், மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடப்பதும். மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கைகளை வெளியிடுவதும் ஏதோ கண் துடைப்புகள் போலவே இருந்து வருகின்றன. இறுதியில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவற்றினால் எதுவும் நிகழ்வதில்லை என்றே கொள்ள முடிகிறது.
கால இழுத்தடிப்பு மாத்திரமே நடைபெற்று வருகிறது.யுத்தம் முடிவுக்கு வந்து 16 வருடங்கள் கடந்த பின்னரும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற காட்சிப்படுத்தல்கள் மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் அதற்கான பெறுபேறுகளைக் காணவில்லை.
இதற்கிடையில் சர்வதேச நிறுவனங்கள் நாட்டுக்குள் வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கான வேலைகளைச் செய்து வருகின்றன. அதே நேரத்தில், நாட்டிற்குள் நிலை பேறான அபிவிருத்தி, சமூக நல்லிணக்கம், சமாதானத்தை மேம்படுத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், நிலை பேறான மீள்குடியேற்றம் போன்ற பல செயற்திட்டங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இன்னமும் அவை நிறைவுக்கு வராதவைகளாகவே இருக்கின்றன.
நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு, மத ரீதியான முரண்பாடுகள்
பற்றிய எண்ணக்கருக்கள் போன்றே சமாதானம் மற்றும் மோதல் தீர்வு பற்றிய தலைப்புகள் என்பன அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டத்தில் உள்ள ஜனரஞ்சகமான பிரகடனங்கள் மற்றும் செயற்றிட்டங்களாக அமைகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகாரத்துக்கு வரும் அரசுகள் மூலம் இவ்வாறான விடயங்கள் முன்னிலைக்கு எடுத்து விடப்படுகின்றன.
இருந்தாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தாமதங்களே ஏற்படுகின்றன. அதற்குத் தொடர்ச்சியற்ற தன்மையும், இடையீடுகளுடனான சிக்கல்களும் காரணமாகும்.
இந்த நிலையில்தான், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவாக, தமிழ்மு ஸ்லிம் நல்லிணக்கம் மற்றும் இணைந்த வாழ்வை வலியுறுத்தும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான நிகழ்வுகள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன.
நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் வரலாற்றுப் பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வகையான நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
யூத அமைப்பொன்றிடமிருந்தும் நிதியைப் பெற்று வரும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது அவ் அமைப்பின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பதாகவே அறியமுடிகிறது.
இந் நிகழ்வுகள் வடக்கில் மன்னிப்புக் கோரலாகவும் கிழக்கில் நீதிக்கும் மனித உரிமைக்கான குரலை இணைக்கும் வகையில் கலந்துரையாடலாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான செயற்பாடுகளை ஏன் இந்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு
இந்த வேளையில் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி இந்த இடத்தில் உருவாகிறது. இதற்கு நிதி வழங்கும் நிறுவனத்தின் அறிவுறுத்தலே காரணமாகும்.
இலங்கையின் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இருந்து வருகின்றனர்.
இந்தச் சிக்கலைத் தனித்து வேறு ஒரு திசையில் அவர்களைத் திருப்பி விடுவதற்காகத் தமிழர்கள் பக்கமாகத் திசை திருப்பிவிடுவது முதல் காரணமாக இருக்கலாம். அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு மாற்றான சர்வதேச தலையீடற்ற செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான உதவி முயற்சியாகவும் இருக்கலாம்.
சிலவேளைகளில் அரசாங்கத்தை இஸ்ரேலியர்களின் செயற்பாடுகளுக்கு உதவக்கூடியதாக மாற்றுவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
உண்மையில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த வெளியேற்றத்தில் உள்ள நல்லவை, கெட்டவை என ஆரம்பத்திலிருந்து ஆராய்ந்து பார்த்தே அதற்கான முடிவுக்கு
வந்தாக வேண்டும்.
வெறுமனே எழுந்தமானமாக நிகழ்ச்சித்திட்டங்கள் தேவை, நிதிகள் தேவை என்பதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் இவ்வாறான விடயங்களை கையிலெடுப்பது தவறாகும்.
இலங்கையில் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், அவர்களின் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் எதிர்பார்க்கின்ற தீர்வானது நல்லிணக்கமாகவும் நீதியாகவும் அமைய வேண்டும். இல்லாது போனால், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகின்ற உள்ளகப் பொறிமுறை ஏற்பாட்டை அனைவரும் ஏற்க வேண்டிய நிலையே அனைவருக்கும் ஏற்படும். அதனைத் தவிர ஒன்றுமில்லை.
இவ்வாறிருக்கையில் தான் மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதா அல்லது பாதிக்கப்பட்ட, அடக்கப்பட்ட தரப்புக்கானதா? என்ற கேள்வி தோன்றும். அது மன்னிப்பு கோர வேண்டியவர்கள் அதற்குத் தயாரா? இல்லையானால் இந்தக் கேள்விக்கான பதிலை யாரிடமிருந்து எதிர்பார்ப்பது என்பதாக தமிழர்கள் பக்கம்தான் மாறி நிற்கும்.
5 hours ago
7 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
13 Nov 2025