Editorial / 2026 மே 15 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி.கபில
சுமார் 10 கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான "கொகெய்ன்" (Cocaine) போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வர முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர், வௌ்ளிக்கிழமை (15) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 60 வயதுடைய இந்தியப் புவியியலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள, எதனையும் அறிவிப்பதற்கில்லாத "பச்சை வழித்தடத்தின்" (Green Channel) ஊடாக போதைப்பொருளைக் கடத்திச் செல்ல முயன்றபோதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
சந்தேக நபர் உகாண்டாவின் கம்பாலா நகரிலிருந்து இந்தப் போதைப்பொருளைப் பெற்றுக்கொண்டு, கட்டார் நாட்டின் தோஹா நகரை வந்தடைந்துள்ளார்.
அங்கிருந்து கட்டார் ஏர்வேஸின் QR-664 என்ற விமானம் மூலம் வௌ்ளிக்கிழமை(15) காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப்பொதியில் இருந்த இரண்டு சான்றிதழ் கோப்புகளுக்குள் (Files), மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 கிலோ 150 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் இதன்போது கண்டெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக, கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.




15 May 2026
15 May 2026
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 May 2026
15 May 2026
15 May 2026