Freelancer / 2026 மே 10 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் நேற்று சனிக்கிழமை மாலை சந்தித்தமையை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை அடுத்து இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக த.வெ.கவின் எண்ணிக்கை 107 ஆக குறையும். ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தேவை எனும் நிலையில், காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, ஐயு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கேட்டு விஜய் கடிதம் எழுதி இருந்தார்.
அதன் பேரில், முதல் கட்சியாக காங்கிரஸ் தனது ஆதரவை அறிவித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளதால், த.வெ.க தலைமையிலான கூட்டணியின் பலம் 112 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். கட்சிகள் நேற்று முன்தினம் தங்கள் ஆதரவை அறிவித்தன. அந்த இரு கட்சிகளுக்கும் தலா 2 எம்.எல்.ஏக்கள் உள்ளதால், பலம் 116 ஆக உயர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தங்கள் ஆதரவை அறிவித்தன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா 2 எம்.எல்.ஏக்கள் உள்ளமையால் பலம் 120 ஆக அதிகரித்தது. இதன் காரணமாக த.வெ.க. பெரும்பான்மை பலத்தை பெற்றது.
இதையடுத்து, ஆளுநரைச் சந்திக்க விஜய் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. நேற்று இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் கேரளா செல்ல திட்டமிட்டிருந்த ஆளுநர் அர்லேகர், விஜய் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தனது பயணத்தை ரத்து செய்தார். மேலும், மாலை 6.30 மணி அளவில் சந்திக்க விஜய்க்கு அவர் நேரம் ஒதுக்கினார்.
இதன் பின்னர், ஆளுநரை நேரில் சந்தித்த விஜய், பெரும்பான்மை பலம் இருப்பதற்கான கடிதங்களை நேரில் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விஜய் உடன் கூட்டணி கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம், சி.பி.எம். மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம் எம்.பி. சு.வெங்கடேசன், வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
விஜய்க்கு பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட ஆளுநர், அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் விஜய் பதவியேற்பது உறுதியானது. சென்னை நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. (a)
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago