2026 மே 09, சனிக்கிழமை

இலங்கை - வியட்நாம் இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Editorial   / 2026 மே 08 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகள் சார்ந்த 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு, இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுற்றுலா, பாதுகாப்பு, மதம், வர்த்தகம், போக்குவரத்து, பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த ஒப்பந்தங்கள் இதன்போது கையெழுத்தாகின.

பரிமாறிக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்:

பொலிஸ் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி: வியட்நாமின் மக்கள் பொலிஸ் அகடமி மற்றும் இலங்கை தேசிய பொலிஸ் அகடமி ஆகியவற்றிற்கு இடையே பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. இதில் வியட்நாம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லுவோங் டேம் குவாங் (General Luong Tam Quang) மற்றும் இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் கையெழுத்திட்டனர்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்: இரு நாட்டு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில், வியட்நாம் அமைச்சர் வூ ஹாய் குவான் (Mr. Vu Hai Quan) மற்றும் இலங்கை அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மத விவகாரங்கள்: வியட்நாமின் இன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மற்றும் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றிற்கு இடையிலான ஒப்பந்தம், அமைச்சர்களான நுயென் டின் காங் (Mr. Nguyen Dinh Khang) மற்றும் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரால் பரிமாறப்பட்டது.

கலாசார ஒத்துழைப்பு: கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறையிலான ஒத்துழைப்பு குறித்து, வியட்நாம் பிரதி அமைச்சர் ஹோ அன் பொங் (Mr. Ho An Phong) மற்றும் இலங்கை அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோர் ஒப்பந்தங்களை மாற்றிக்கொண்டனர்.

தகவல் மற்றும் தொடர்பாடல்: தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்காக, வியட்நாம் பிரதி அமைச்சர் ஹோ அன் பொங் மற்றும் இலங்கை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

உரத் தொகுதி நன்கொடை:


இதேவேளை, வியட்நாம் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மெட்ரிக் தொன் உரத் தொகுதி, வியட்நாம் நிதி அமைச்சர் என்கோ வென் டுவான் (Ngo Van Tuan) அவர்களால் விவசாய அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த அழைப்பினை ஏற்று வியட்நாம் ஜனாதிபதியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .