2026 மே 14, வியாழக்கிழமை

dd

ஈழத் தமிழர் விவகாரம்: தமிழக அரசுக்கு வி.சி.க வலியுறுத்தல் (வீடியோ)

Mayu   / 2026 மே 14 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர், தமிழக மற்றும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் குறித்துப் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

நேற்றைய தினம் (13) தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். புதிய அரசு அமைந்தால் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என மீனவ மக்கள் நம்பி வாக்களித்துள்ளதை நினைவு கூர்ந்த அவர், மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசுடன் இணைந்து நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஈழத் தமிழர்கள் இன்றும் சிங்களப் பேரினவாத அரசின் கீழ் இன்னல்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழீழ விடுதலைக்காக அறவழியில் போராடிய தந்தை செல்வா மற்றும் ஆயுதமேந்திப் போராடிய பிரபாகரன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றினார்.

மேலும், 2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையை நினைவுகூர்ந்த அவர், பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்:

ஈழத் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளும் தனித் தமிழீழத்தை மீட்டுத்தர தமிழக அரசு முதன்மை முயற்சி எடுக்க வேண்டும்.

மே 18 அன்று கடைப்பிடிக்கப்படும் சர்வதேச இனப்படுகொலை தினத்தை தமிழக அரசே அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்து, வீரவணக்கம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் திமுக அரசு வழங்கிய சலுகைகள் மற்றும் வீடுகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"ஈழத் தமிழர்கள் முதன்மையாகக் கோருவது இந்தியக் குடியுரிமையைத்தான். எனவே, ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முகாம்களில் உள்ள அனைத்து ஈழத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை பெற்றுத் தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .