2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

குறைந்த வயது கர்ப்பம் அதிகரிப்பு

Janu   / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைவது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டில் 79 பேர், 2024 இல் 53 பேர் கர்ப்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. 

2025 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட திருமணங்கள் 9 பதிவாகியுள்ளதுடன் இது 2024 உடன் ஒப்பிடும்போது சிறுவர் திருமணங்களில் குறைவு எனவும்  2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட திருமணங்கள் 14 பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

அத்துடன் நிர்வாண புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியிடுவதாக கூறி  சிறுவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக 150 வழக்குகள் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளது. 

சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், ஒக்டோபர் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும் ​தெரியவருகிறது.

இதில்  8,514 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெறப்பட்டதாகவும்  மீதமுள்ள 1,941 வழக்குகள் ஏனையவை எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் பிறப்புச் சான்றிதழ் இல்லாத 32 சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளன.

சட்டவிரோத போதைப்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்திய 116 சிறுவர்கள் குறித்தும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட்டு பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற சம்பவங்கள் 9 பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

கடந்த ஆண்டில் 627 சிறுவர்களுக்கு உளவியல் சமூக ஆதரவு அல்லது ஆலோசனை தேவைப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சிறுவர்கள்  துஷ்பிரயோகம் தொடர்பான 93 முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 கடந்த ஆண்டில் 545 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும்  231 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X