2026 பெப்ரவரி 06, வெள்ளிக்கிழமை

’சௌமியமூர்த்தி தொண்டமான் நாட்டின் அடையாளம்’

Freelancer   / 2026 பெப்ரவரி 06 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற பெயர்  இந்த நாட்டின் அடையாளமாகும். அவர்  மலையக மக்களுக்கு செய்த சேவைகளை வேறு எவராலும் ஈடுகொடுக்க முடியாது.  இவ்வாறான ஒருவரின் பெயரை  நிறுவனங்களுக்கு சூடியிருப்பதை நீக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதாது பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) அன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது இராதாகிருஷ்ணன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் நாங்கள் முழுமையாக சந்தோசப் படாவிட்டாலும் அரசாங்கம் கூறிய 1750 ரூபாவை கொடுத்தமையை நாங்கள் பாராட்ட வேண்டும். விசேடமாக கூட்டு ஒப்பந்த கால கட்டத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் எக்காரணத்திற்காகவும் இணங்காத நிலையில் இம்முறை கம்பனிகளை 200 ரூபாவை வழங்குவதற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். அரசாங்கமும் 200 ரூபாவை வழங்குகின்றது. இது வரவேற்கத்தக்கது.

எவ்வாறாயினும் சம்பள அதிகரிப்பை கொடுத்துவிட்டு அவர்களுக்கு கொழுந்து கிலோ அளவை அதிகரிக்கக்கூடாது என்பதனை கேட்டுக்கொள்கின்றோம். முழுமையாக அந்த சம்பளத்தை தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை கவரவிலவில் 8 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மலை தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு அந்த தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது அராஜக நடவடிக்கை என்றே கூற வேண்டும். தோட்டங்களில் தோட்ட அதிகாரிகளின் அக்கிரமம் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன்.

மலையகத்தில் நிறுவனங்களின் பெயர் தொண்டமானின் பெயரை கொண்டதாக இருக்கக்கூடாது என்று சிலர் கூறியுள்ளனர். இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சௌமியமூர்த்தி தொண்டமான் இந்த நாட்டின் அடையாளம், ஒரு தேசியத் தலைவர் அதனால்தான் பாராளுமன்றத்திலும் சிலை, படம் உள்ளன. இவ்வாறான நபரின் பெயரை வைக்கக்கூடாது என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களுக்கு செய்த சேவைகளை வேறு எவராலும் ஈடுகொடுக்க முடியாது. அந்தளவுக்கு அவர் மக்களக்கு சேவை செய்தவராகும். அவரின் ஞாபகம் இருக்கும் வரையில் அவரை எவராலும் மறக்க முடியாது. இவ்வாறான ஒருவரின் பெயர் இருக்கக்கூடாது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் பெயரை வைப்பதில் எவ்வித தப்பும் இல்லை. அந்த நிறுவனங்களில் ஊழல் நடந்திருந்தால் அதனை தட்டிக் கேட்க முடியும். ஆனால் பெயரை வைக்க கூடாது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

உயிர்நீத்த போராளிகளின் பெயர்களை வைக்கப் போவதாக சிலர் கூறியுள்ளனர். ஆனால் நுவரெலியாவில் 34 பேரின் பெயருடன் நினைவு தூபியொன்றை அமைத்துள்ளோம். அதற்கு எவரும் எதுவும் செய்யவில்லை. நீங்கள் முடியுமானால் அதனை வளப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X