2026 மே 14, வியாழக்கிழமை

dd

சிவப்பரிசி சோறுக்காக சிதறிப்போன கனவு

Janu   / 2026 மே 14 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் அண்மையில் சுவாரசியமான, மற்றும் சங்கடமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. குளிர்ந்த பிரதேசமொன்றில் பணம் செலுத்திப் பயில வேண்டிய ஒரு வதிவிடப் பாடநெறியைத் தொடரச் சென்ற இளைஞன், அங்குக் சாப்பிடுவதற்கு "சிவப்பரிசிச் சோறு" (Red Rice) இல்லை என்ற காரணத்திற்காகப் பாடநெறியை இடையிலேயே கைவிட்டு வீடு திரும்பியுள்ளான்.

இந்த இளைஞன் சாதாரணமானவன் அல்ல; கிராமத்துப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பயின்று, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, தெற்கின் தலைநகரிலுள்ள (காலி) ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்றவன். உயர்தரப் பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, அரச பல்கலைக்கழகமொன்றில் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்தவன். கையில் பட்டச் சான்றிதழ் இருந்தும் நிரந்தர வேலை இல்லாததால், தன் செலவுகளுக்காக மேலதிக வகுப்புக்களை (Tuition) நடத்தி வந்தான்.

இந்த நிலையில்தான், தனது பாடத்துறை சார்ந்த மேலதிக டிப்ளோமா பாடநெறி ஒன்றைப் பற்றிய தகவல் நண்பர் ஊடாக அவனுக்குக் கிடைத்தது. அந்தச் சான்றிதழைப் பெற்றால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டும் எனத் தெரியவந்தது. இதற்காகப் பதிவுக் கட்டணமாக பத்தாயிரம் ரூபாயும், பின்னர் சான்றிதழ் பெறுவதற்காக அறுபதாயிரம் ரூபாயும் செலுத்த வேண்டியிருந்தது.

அரசாங்க உத்தியோகம் எனும் ஆசையில், பணத்தைச் செலுத்தி விண்ணப்பித்த அந்த இளைஞன், நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்து கடந்த வாரம் நுவரெலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றான்.

சென்ற அன்றே இரவு தனது தாய்க்கு அழைப்பை ஏற்படுத்திய இளைஞன், “இங்க சாப்பாடு சரியில்லைம்மா!” என்று புலம்பியிருக்கிறான். அடுத்த நாள் மீண்டும் அழைத்தவன், “இந்தப் பிரதேசத்தில் எங்குத் தேடியும் சிவப்பரிசிச் சோறு கிடைக்கவில்லை” என்று கவலையுடன் கூறியுள்ளான்.

வீட்டில் இருந்தபோது மூன்று வேளையும் சிவப்பரிசிச் சோறு சாப்பிட்டுப் பழகிய மகனுக்கு, பிடித்தமான உணவில்லாமல் போனதை நினைத்துத் தாய் வருந்தினாள். ஆனால், அவனது தந்தையோ, "வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று சோறே பார்க்காமல் மக்கள் வாழும்போது, இவனுக்கு ஒரு ஊருக்குள்ளேயே இருக்க முடியாதா?" என்று கடும் கோபத்தில் இருந்தார்.

இளைஞன் நுவரெலியா சென்று நான்கு நாட்கள் தான் ஆகியிருந்தது. ஐந்தாம் நாள் இரவு, யாருக்கும் சொல்லாமல் திடீரென அவன் வீடு வந்து சேர்ந்தான். "ஏன் திடீரென்று வந்தாய்?" எனப் பெற்றோர்கள் வினவியபோது, "சாப்பிடாமல் இருக்க முடியாது; எதைச் செய்வதற்கும் முதலில் வயிறு நிறையச் சாப்பிட வேண்டும்!" என்று கூலாகப் பதிலளித்துள்ளான்.

"மகன் அரசாங்க வேலைக்குச் சேரப் பாடநெறி படிக்கப் போயிருக்கிறான்" என்று ஊர் முழுக்கப் பெருமை பேசிக் கொண்டிருந்த அந்தப் பெற்றோர், இப்போது மகனின் இந்தச் செயலால் ஊரார் முகத்தில் எப்படி விழிப்பது என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .