2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

”தேசிய பாதுகாப்புப் பேரவையைக் கூட்டவும்”

R.Tharaniya   / 2025 ஜூன் 23 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான்-இஸ்ரேல் மோதலினால் நமது நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் தேசிய பாதுகாப்புப் பேரவையை உடனடியாக கூட்டி, ஆராயந்து தீர்வுகளை பெற்றுத் தாருங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் திங்கட்கிழமை (23)  கோரிக்கை விடுத்தார்

பாரசீக வளைகுடாவை அரேபிய கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் போது, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு (LNG) கேஸ் துறைகளில் பெரும் பிரச்சினை எழும் என்றும் சுட்டிக்காட்டினார். 

 ஈரானிய பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் பிரகாரம், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கிறது. ஒட்டுமொத்த சர்வதசே எண்ணெய் வர்த்தக விநியோகத்தில் 20-30% க்கு இடையிலும், சர்வதேச இயற்கை எரிவாயு விநியோகத்தில் 1/3 க்கும் அதிகமானவை இந்த ஜலசந்தி நீர் வழித்தடம் ஊடாக செல்வதால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் கடுமையான அதிகரிப்பு ஏற்படும் என பல தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு நாடாக நாம்  உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தை கூட்டி, எழுந்துள்ள இந்த பிரச்சினைக்குத் தீர்வுகளைக் காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் பட்சத்தில் எரிசக்தித் துறையில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்ய மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை தற்போது அதிகரித்துள்ளன. நாடாக நாமும் இது குறித்து ஆராய்ந்து இதன்பால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

அவ்வாறே, மத்திய கிழக்கில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து ஆராய்ந்து, அவர்களினது வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது எழுந்துள்ள சூழ்நிலைக்கு மத்தியில் ஏதேனும் தொழில் இழப்புகள் ஏற்பட்டால், அது நாட்டை கடுமையாக பாதிக்கும். எனவே இந்த விடயம் உள்ளிட்ட பன்முக நோக்கிலான முன்னாயத்த ஆராய்வை நடத்துமாறு கோரிக்கைவிடுத்தார். .

மேலும், சுற்றுலாத் துறை பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு ஆகியவற்றிலும் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை நல்கி வரும் தொழிற்துறை, விவசாயம் மற்றும் சேவைகள் துறை உட்பட ஒட்டுமொத்த துறைகளிலும் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை கையாள்வதற்கு ஏற்ற தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அவசர பொருளாதார வேலைத்திட்டத்தின் தேவை நமக்கு காணப்படுகிறது. இதனை விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். இந்த பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட வேண்டும். இருதரப்பு மற்றும் பல்தரப்பு உறவுகளை வளர்த்துக் கொண்டு, சர்வதேச சமூகத்துடன் இணைந்து நமது நாடு எதிர்கொள்ள காத்திருக்கும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலைமை நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் மூலோபாய ரீதியாக பேச்சுவார்த்தைகளைத் நடத்தி, தளர்வான அணுகுமுறையை நோக்கி நகர வேண்டும். உலகளாவிய தெற்கு எமது நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

சார்க் அமைப்பு உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளில் கவனம் செலுத்தி, உலகளாவிய தெற்கில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை உலகின் கவனத்துக்கு கொண்டு சென்று, தற்போதைய மோதல் உக்கிரத்தை குறைப்பதற்கும், மோதல் நிலைமையைக் குறைப்பதற்கும் இராஜதந்திர ரீதியாக எடுக்க முடியுமான சகல தலையீடுகளையும் எடுக்குமாறும், தேசிய பாதுகாப்பு பேரவையின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து,  இந்த உலகளாவிய நிலைமை குறித்து கலந்துரையாடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .