Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க டெல்லி வருவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்து கருணாநிதி, இன்று செவ்வாய்க்கிழமை (08) கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
அன்பார்ந்த பிரதமர் அவர்களுக்கு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இலங்கைப் பிரதமராக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அண்மையில் டெல்லிக்கு வருவதையொட்டி, இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன்.
இந்த மாத மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவும் ஒக்டோபர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டெல்லிக்கு வருகை தரவுள்ளார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நான் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், மிகத் தொன்மைக் காலம் முதல் இலங்கை நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதொரு தீர்வு காண வேண்டுமென்று 1956ஆம் ஆண்டிலிருந்தே குரல் கொடுத்து வருவதை தாங்கள் அறிவீர்கள். எனவே இலங்கைத் தமிழர்களுடைய மனக் குறைகளைத் தேவையான போதெல்லாம் உரிய அரங்குகளில் தகுந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான கடமை எனக்கு உண்டு.
13-2-2015 அன்று தங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்துக்கு தங்களுடைய அன்பான கவனத்தை ஈர்த்திட விரும்புகிறேன்.
அதில் பின்வருமாறு நான் விளக்கி யிருக்கிறேன்
'இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே சிறிசேன இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்துக்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே சிறிசேனவுக்கு விரும்பி வாக்களித்தார்கள்.
தேர்தலின்போது சிறிசேனவும், அவருடைய கூட்டணிக் கட்சியினரும் அளித்த வாக்குறுதிகளை தமிழர்கள் உண்மையிலேயே நம்பினார்கள்.
தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும் இராணுவத்தினரும் சிங்களவர்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும் எதிர்பார்த்தனர்.
சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் 13ஆவது திருத்தம் நேர்மையான முறையில் அமுலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.'
இலங்கை அதிபராக சிறிசேன பதவிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட பிறகும், அவர் தமிழர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகச்சிறிய முன்னேற்றம் அல்லது முன்னேற்றமே இல்லை என்கிற அளவுக்குத் தான் நிலைமை நீடித்து வருகிறது.
சிங்களத் தலைவர்களால் தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகியிருப்பது தமிழர்களைப் பொறுத்தவரை இது முதல் முறையல்ல.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் கடந்த நூறாண்டு காலத்தில் தமிழர்களோடு சிங்களவர்கள் செய்து கொண்ட 14 ஒப்பந்தங்கள் எப்படியெல்லாம் நிறைவேற்றப்படவில்லை, எப்படியெல்லாம் ஒப்பந்தங்களுக்கு மாறாக நிகழ்வுகள் நடந்தன என்பதைப் பற்றி கட்டுரை ஒன்றே தீட்டியிருக்கிறார்.
நான்காவது முறையாக இலங்கைப் பிரதமராகப் பொறுப்பேற்றவுடனே ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது 'விடுதலைப் புலிகளுடன் இறுதிக் கட்டப் போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தற்போது தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு ஏற்படும் உகந்த சூழ்நிலை உருவாகியுள்ளது' என்று தெரிவித்திருக்கிறார்.
பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு மறுநாள் ரணில் பேட்டியளித்தார். (தி இந்து, ஆங்கில நாளேட்டின் முன்னாள் முதன்மை ஆசிரியர், திரு.ராம் அவர்களுக்கு அளித்த பேட்டி) அந்தப் பேட்டி விவரங்கள் 24-8-2015 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
ரணில் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றித் தன்னுடைய கருத்துகளை அந்தப் பேட்டியிலே வெளியிட்டிருக்கிறார்.
அ) மாகாணசபைகள் உண்மையிலேயே நல்ல பணி ஆற்றுவதற்கான வழிவகைகள்;
ஆ) மாகாணசபைகளுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள அதிகாரங்கள், மற்றும் இரண்டுக்கும் இணைந்து இருக்கும் அதிகாரங்கள்
இ) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உண்மையான பிரச்சினை யாதெனில், தங்களுடைய நிலங்களிலிருந்து ஆக்கிரமிப்பின் மூலமாக அகற்றப்பட்ட தமிழர்களை மீள் குடியிருப்பின் மூலம் அமர்த்துவது தான்.
ஈ) சட்டம்- ஒழுங்குப் பிரச்சனைகளில் மாகாணக் கவுன்சில்களுக்குத் தலையிடும் உரிமை;
உ) இந்திய நாடும் ஏற்றுக் கொண்ட 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம்;
ஊ) இங்கை அரசியல் அமைப்புச் சட்டததுக்கு உட்பட்டு உள்நாட்டு விசாரணை நடத்துதல் போன்ற பல்வேறு கருத்துகளை ரணில் வெளியிட்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக ரணில் வழங்கியிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும்போது, பல்லாண்டுக் காலமாக ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஒரு நல்ல ஆரம்பம் உண்டாகும்.
2002ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமராக இருந்த போது ரணில் விக்கிரமசிங்க நோர்வேயின் ஒஸ்லோ நகரில், விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தை முடிவில், ஒன்றுபட்ட இலங்கை நாட்டில் சிங்களர்களுக்கு என்று ஒரு மாநிலமும், தமிழர்களுக்கு என்று மற்றொரு மாநிலமும் ஆக இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தார் என்பதை உலகத் தமிழர்கள் மறந்து விடவில்லை.
உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை, அவர்களே தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக, ஐ.நா. மேற் பார்வையில் 'பொது வாக்கெடுப்பு' நடத்தப்பட வேண்டுமென்பதே திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலைப்பாடாகும். இவ்வகையான அரசியல் தீர்வு மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.
இலங்கைக் கடற்படையினராலும், சிங்கள மீனவர்களாலும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்கள் தொடர்ந்து நீடித்து வரும் கொடுமையைத் தாங்கள் அறிவீர்கள்.
தாங்கள் இலங்கைப் பிரதமரோடும், இலங்கை அதிபரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றினை ஏற்படுத்தினால் நான் தங்களுக்குப் பெரிதும் நன்றியுடையவன் ஆவேன்.
மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை அதிபராக இருந்த போது, சுதந்திரமான, சர்வதேச விசாரணை வேண்டும் என்று மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக, தற்போது ஐக்கிய அமெரிக்கா, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீது விசாரணை மேற்கொள்வது தொடர்பாக புதிய திருத்தப்பட்ட தீர்மானம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வர விருப்பதாக பரவலாகச் செய்திகள் வெளியாகி யிருக்கின்றன.
அமெரிக்காவினுடைய திருத்தப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தேடுவதில் ரணில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்திலே உள்ள நாங்களும், உலகத் தமிழர்களும் கேடு விளைவிக்கும் அமெரிக்க நாட்டின் இந்தத் தீர்மானத்தை முற்றாக எதிர்க்கிறோம். அமெரிக்காவும் இலங்கையும் மேற்கொள்ளும் இத்தகைய தந்திரத் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளிக்குமானால், வரலாறு மன்னிக்காது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைகளின் அனைத்துப் பரிமாணங்களையும் கருத்திலே கொண்டு, இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை நடு நிலையோடு ஆய்வு செய்து, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உலகச் சரித்திரத்தில் தனித்தன்மை வாய்ந்த மாபெரும் தேசிய இனம் ஒன்றுக்கு நேர்ந்த சுய மரியாதையற்றதும், கண்ணியக் குறைவானதுமான நிகழ்வுகள் அனைத்தையும் துடைத் தெறிய கருணையுடன் கூடிய ஆக்கப் பூர்வமான அணுகுமுறையினை தாங்கள் மேற் கொள்ள வேண்டுமென்று இங்குள்ள தமிழர்களும், உலகத் தமிழர்களும்
நன்றியுணர்வோடு தங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.
தாங்கள் இலங்கை ஜனாதிபதியுடனும் இலங்கைப் பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் ஊக்கம் அளித்திடும் விளைவுகளுக்கு வித்திடும் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago