Freelancer / 2025 ஜூலை 16 , பி.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கக் கோரி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் தாக்கல் செய்த வழக்கில், இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரித்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்தது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரான இராஜேந்திரம் பிரதேச சபை தலைவர், உப தலைவர் தெரிவுகளின் போதும், தெரிவுக்கான தேர்தல் முறைமை தொடர்பிலும் கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக சபை அமர்வில் நடந்து கொண்டார் என்று தெரிவித்து, அதற்காக அவரிடம் விளக்கம் கோரியும், அவரைக் கட்சியில் இருந்து இடைநிறுத்தியும் கட்சியின் பொதுச்செயலாளர் அவருக்கு அறிவித்திருந்தார்.
கட்சியில் அந்த முடிவை இரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும, அந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வலியுறுத்தியும், இதுபோன்ற கட்சியின் இடைநிறுத்தல் முடிவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது என்று வழிகாட்டுதல் பணிப்புரை வழங்கும்படி வேண்டியும் இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி சுபாகர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். வழக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர் தரப்பு சட்டத்தரணி தனி ஒரு தரப்பாக முன்னிலையாகி தமது விண்ணப்பத்தை முன்வைத்தார்.
வழக்கைப் பரிசீரித்த மாவட்ட நீதிபதி சதீஸ்வரன், இடைக்கால உத்தரவு தொடர்பான தீர்ப்பை இன்று புதன்கிழமை வழங்குவதாகத் தெரிவித்து இருந்தார். தீர்ப்பு இன்று காலை வழங்கப்பட்டது.
பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் தேர்வு தொடர்பாகக் கட்சியின் நிலைப்பாடு தமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவரிடம் விளக்கம் கோரி பொதுச்செயலாளர் அனுப்பிய கடிதத்தில், அந்த விடயம் அவருக்குத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பதைப் பொதுச்செயலாளர் குறிப்பிட்டிருக்கின்றமையை நீதிபதி தமது நிராகரிப்பு உத்தரவில் சுட்டிக்காட்டினார்.
கட்சி விளக்கம் கோரியுள்ளது. விளக்கத்தைப் பார்த்து ஒரு முடிவை - தீர்மானத்தை - கட்சி எடுப்பதற்கு முன்னர் நீதிமன்றத்தை அணுகி தடை விதிக்கும்படி கோர வேண்டிய தேவை மனுதாரருக்கு அவசரமாக எழுந்திருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை என்று நீதிபதி தமது இன்றைய உத்தரவில் சுட்டிக்காட்டினார்.
எனினும், வழக்கின் எதிர் மனுதாரர்களான கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கட்டளை வழங்கினார். அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். (a)
16 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago