2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

திருட்டுப் பொருட்களை மோசடி செய்த கான்ஸ்டபிள் கைது

Editorial   / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராஜா சரவணன்

 

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்துத் திருடப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைத் திருடனிடமிருந்து பெற்று, அவற்றை மறைத்து வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த குறித்த கான்ஸ்டபிளை, நேற்றுப் புதன்கிழமை (29) மாலை கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்த விபரங்கள்:

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கடந்த 21-ஆம் திகதி வீடு ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டன. இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக நாவலடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான திருடனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. குறித்த திருடன், தான் திருடிய பொருட்களைத் தனது வீட்டிலேயே வைத்திருந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள், "நான்தான் இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறேன்," எனக் கூறி, திருடனிடமிருந்த தங்க ஆபரணங்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

மறைத்து வைக்கப்பட்ட பொருட்கள்:

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி, தற்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த அந்த கான்ஸ்டபிள், திருடனிடமிருந்து வாங்கிய பொருட்களைத் தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்து மறைத்து வைக்குமாறு கூறியுள்ளார் என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசேட நடவடிக்கைக்காகப் பாசிக்குடா சுற்றுலா மையத்தில் கடமையில் இருந்த குறித்த கான்ஸ்டபிளை, உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய நேற்று மாலை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன், அவரது நண்பரிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை வாழைச்சேனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .