2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. ரஸீன் ரஸ்மின்

குப்பை விவகாரம் தொடர்பில், புத்தளம் மக்கள் பொறுமையாகச் செயற்படுவதுடன், அதிகமாக துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும், புத்தளம் பெரியபள்ளிவாசல், பொதுமக்களைக் கேட்டுள்ளது.

இது தொடரில், புத்தளம் பெரியபள்ளிவாசலால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில், புத்தளம் நகருக்கு வருகைதந்த ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி, அமைதியான போராட்டத்தை நடத்திய மக்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகள் வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இன, மத வேறுபாடுகளின்றி, தியாகங்களுக்கு மத்தியில் எதிர்காலச் சந்ததியினரைப் பாதுகாக்கும் இந்தச் சரித்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புத்தளம் மக்களின் உணர்வுகளை, அரசாங்கமும் அரசியல்வாதிகளும் கவனத்திலெடுக்க வேண்டும் என்பதே, சிவில் தலைமைகளின் எதிர்பார்ப்பெனவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய அசம்பாவிதங்கள் மற்றும் சமூகத்தை அழிக்கக்கூடிய திட்டங்களில் இருந்து, எமது ஊரையும் எமது சமூகத்தையும் பாதுகாக்க, இறையச்சத்துடனும் உளத்தூய்மையுடனும், இறைவனிடம் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோமென வலியுறுத்தியுள்ள புத்தளம் பெரியபள்ளிவாசல், வெள்ளிக்கிழமை அசம்பாவிதத்தின் போது காயப்பட்ட, வேதனைப்பட்ட, சட்ட சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கு, இறைவன், உடல், உள சுகத்தைத் தர அனைவரும் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளது.

இதேவேளை, சமூகங்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்க நினைக்கும் சில தீய சக்திகளின் முயற்சிகளில் மாட்டிக்கொள்ளாத வகையில், பொதுமக்கள் சமயோசிதமாக செயற்பட வேண்டுமெனக்  கேட்டுக்கொள்வதாகவும், அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X