2025 ஒக்டோபர் 09, வியாழக்கிழமை

நாடகமாடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் கணவரிடம் தப்பிப்பதற்கு  பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்- மஸ்லம் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான   நகைகள்  கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று களவாடப்பட்டு உள்ளதாகவும் தனது கணவர் வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு திடீரென திரும்பவுள்ள  நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக   நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் 32 வயதுடைய  குடும்ப பெண் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் .டபிள்யு.எஸ்.  நிஷாந்த வெதகே வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி   உப பரிசோதகர் .எல்.எம். அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்கள் புலன் விசாரணைகள் துரித கதியில் மேற்கொண்டிருந்தன.

இதற்கமைய அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு இலங்கை பொலிஸ் மோப்ப நாய் பிரிவு என்பன இச்சோதனையில் பங்கேற்றிருந்தன.இருந்த போதிலும் குறித்த வீட்டில் களவாடப்பட்டதற்கான சான்றுகளோ அல்லது மேற் கூறப்பட்ட  45 இலட்சம் ரூபாய்  நகைகள் திருடப்பட்டமைக்கான  எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.இருப்பினும் விசாரணையின் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்த குடும்ப பெண்ணில் சந்தேகமடைந்த  பொலிஸார் அப்பெண்ணை கடந்த அக்டோபர் மாதம் 3 ஆந் திகதி  துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.இதன் போது பல்வேறு உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.

இதனடிப்படையில் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற நிலையில் தனியாக  இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த   குறித்த பெண் தனது கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக  செலவு செய்துள்ளார்.இந்நிலையில்  வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற கணவன் திடீரென  நாடு திரும்பும் நிலையில் இருப்பதாக அப்பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனால் சற்று கலவரமடைந்த அப்பெண் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான   நகைகள்  களவாடப்பட்டுள்ளதாகப் நாடகமாடி கல்முனை பகுதியில் உள்ள பிரபல நகையகத்திற்கு சென்று  நகைகளை விற்பனை செய்ததை   ஒப்புக் கொண்டதுடன் இச் செயற்பாட்டினை   தனது கணவர் வெளிநாட்டில் இருந்து திடீரென இலங்கை வரவுள்ளதாக என்னிடம் தெரிவித்ததால்  இவ்வாறு நகைகள் திருடப்பட்டதாக  நாடகம்  ஆடியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட  அப்பெண் கைது செய்யப்பட்டு   சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்தனர்.இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ .ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.பின்னர் சந்தேக நபரான  குறித்த பெண் சார்பில்  இடைமனுக் கோரிக்கை   முன்வைக்கப்பட்டது.இதன்போது  அப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில்  கடும் தொனியில் சந்தேக  நபரை எச்சரித்த நிலையில் பிணையில் செல்ல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X