2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

“புத்தாண்டு பொதுமக்களுக்கு சுபமாக அமையாது”

Janu   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் காரணமாகவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

புதன்கிழமை (01) அன்று கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது:

"எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலம் பொதுமக்களுக்கு அத்தனை சுபமானதாக அமையப் போவதில்லை. இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கம் 13.5 சதவீத அதிகரிப்பைக் கோரியிருந்தது.

அதேபோல், இலங்கை மின்சார சபையை உத்தியோகபூர்வமாக கலைப்பதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி அநுர குமாரவே ஏற்றுக்கொண்டார். அந்த நிறுவனங்களில் இருந்து விலகுவதற்கு சுமார் 2,000 ஊழியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கான ஓய்வூதியத் திட்ட முன்மொழிவை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கவனத்தில் எடுத்துள்ளது. எனினும், அது இம்முறை மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாகவே தற்போதைய அதிகரிப்பு 10.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 13.5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதேபோன்று, தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணம் 8.7 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துக் கட்டண அதிகரிப்புகளின் ஊடாக கைத்தொழில் துறையில் பாரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது."

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன, முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .