2026 மார்ச் 25, புதன்கிழமை

பாழ்ங்கிணறு படுகொலை ; 96 மணிநேர விசாரணை

Janu   / 2026 மார்ச் 24 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பை அதிரவைத்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (23) மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, பிரதான சந்தேகநபர்களை நான்கு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கியதுடன், கொள்ளையிடப்பட்ட நகைகளை  கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை (20), அன்று வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி வயல் பிரதேச கிணற்றினுள் வீசப்பட்டிருந்தார்.

அதே கிணற்றிலிருந்து ஏற்கனவே இதேபோன்ற மற்றுமொரு சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. இச்சம்பவங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி. மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த துரித நடவடிக்கையின் மூலம், பிரதான சந்தேகநபர்கள் மூவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திங்கட்கிழமை (23)  மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட போதிலும், நீதிமன்ற நேரத்தைத் தாண்டியதனால் நீதவான் அண்ணாத்துரை தர்சினியின்  உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களை மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்க பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்ற நீதவான், பிரதான சந்தேக நபர்கள் மூவரை 4 நாட்களுக்கு பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். ஏனைய இரு சந்தேகநபர்களையும் (நகைக்கடை உரிமையாளர்கள்) எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .