Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான், வாலகிருஸ்ணா
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு கார், இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்தக் குழுவினர் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்குத் தனது மூன்று வயதுக் குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் திடீரெனக் காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை, குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்குப்போராடிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது குழந்தை அருகில் உள்ள வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி. மேனன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளம் காணப்பட்டது. அதன் அடிப்படையில் வவுணதீவு, காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மற்றும் கணவனின் சகோதரன் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின:
கடந்த வியாழக்கிழமை பேருந்துக்காகக் காத்திருந்த அந்த இளம் தாயைக் கண்ட தம்பதியினர், "நாங்களும் மட்டக்களப்பு நகருக்கே செல்கிறோம்" என்று கூறி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். நகருக்குச் சென்ற அந்தத் தாய், அங்கு தனது நகைகளை அடகு மீட்டுள்ளார். பின்னர் மீண்டும் வவுணதீவு திரும்பும் வழியில், "குறைந்த வாடகையில் அழைத்துச் செல்கிறோம்" எனக் கூறி அவரை மீண்டும் ஏற்றியுள்ளனர்.
வலையிறவு பாலத்தை அண்மித்தபோது, அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மயக்கமடைந்ததும், குழந்தையை வயல் பகுதியில் எறிந்துவிட்டு, பெண்ணின் 4.5 பவுண் தாலிக்கொடியைப் பறித்துள்ளனர். பின்னர் மயக்க நிலையில் இருந்த பெண்ணை நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதே பாணியில் கடந்த 28ஆம் திகதி திக்கோடையைச் சேர்ந்த 45 வயதுடைய ரவி நளாயினி என்பவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி, மயக்க மருந்து கொடுத்து, அவரது 7 பவுண் தாலிக்கொடியைப் பறித்துவிட்டு அதே கிணற்றில் வீசியுள்ளனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று அதன் மூலம் கார் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதாகச் சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமன்றி, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago