Editorial / 2025 ஜனவரி 05 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

மனித படுகொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை வழங்குவதற்காக, நீதவானுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, பெண்கள் மூவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் களுவாஞ்சிகுடி நீதவானின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இணைந்ததாக கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரும் முன்னார் உறுதியளிக்கப்பட்டவாறு நீதிமன்ற தினத்தன்று, பிணை வழங்காமை காரணமாக, அந்த பெண்கள் மூவரும், வழக்கு விசாரணை நிறைவில், அது தொடர்பில் நீதவானிடம் வினவியுள்ளனர். சந்தேகநபரான அந்த கான்ஸ்டபிள், தங்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக நீதவானிடம் அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், நீதவானால், பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் மற்றும் லஞ்சம் வழங்கியதாக கூறப்படும் அந்த மூன்று பெண்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .