2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பிரிந்திருப்பதால் ‘சாதிக்க முடியாது’

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்   

தமிழர்களின் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற ஒரே கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே என்று தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அதனால், கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் தாம் பிரிந்து நிற்பதால் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூறினார்.

அரசாங்கம் தமிழ்மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கவும், புதிய அரசமைப்பை கொண்டு வருவதற்கும் தயாராக இருந்தால் மாத்திரமே, ஆதரவு வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதுத் தொடர்பில், பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

அம்பாறை அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பில், நேற்று (14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், தாம் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்றும் ஆனால் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நீண்டதூரம் பயணித்திருப்பதாகவும் தெரிவித்தார்.   

“அரசியல் தீர்வு, எமது அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக இருந்தால், நிச்சயமாக இந்த அரசாங்கத்துக்கு ஆதரவை கொடுப்போம்” என்றார்.  

 “2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், போர் வெற்றியோடு, நாங்கள் மஹிந்த அரசுடன் என்ன விதமாக செயற்பட்டோம் என்பது, மக்களுக்கு தெரியும். மஹிந்த அரசுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியமை பலருக்கு தெரிந்த விடயம். மஹிந்த தரப்பினரின் அடக்குமுறைகள், பேச்சுவார்த்தைகள் சாத்தியமற்ற வேளையில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருக்கின்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வந்தோம்.  

“2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்துடன் இணைந்து பயணித்தோம். ஆனால் அரசாங்கத்தோடு சேரவில்லை. எங்களுடைய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் வரையில், நாங்கள் அதைச் செய்யப் போவதுமில்லை. அந்த அரசு ஊடாக எமது தமிழ் மக்களுக்கு பல விடயங்களை சாதிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அந்த முயற்சிகள் பல கைகூடி இருந்தாலும் சில நிறைவேறவில்லை. விசேடமாக அரசியல் தீர்வு பிரச்சினை, புதிய அரசமைப்பு உருவாக்கப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தோம். அதன் ஒரு நகல் வரைவை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்திருந்தும் கூட அது நிறைவேற்றப்படவில்லை.  

“கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் உட்பட பல விடயங்கள் கை கூடி வந்திருந்தும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மறுபடியும் ராஜபக்‌ஷ குடும்பத்தினரிடம் ஆட்சி சென்றிருக்கின்றது.   

“இவ்வாறானச் சூழ்நிலையில், மக்களிடம் சென்று எவ்வாறு வாக்குக் கேட்க வேண்டும் எதைக் கூறி வாக்கு கேட்க வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை எமது வேட்பாளரிடம் மனந்திறந்து பேசி இருக்கின்றோம்.   

“இன்றைய (நேற்றைய 14) தினத்தில், அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் விவகாரம், பிரதேச சபைகளை புதிதாக உருவாக்குதல், எல்லைகள் நிர்ணயம் செய்யும் விடயத்தில் உள்ள சவால்கள், முன்னாள் போராளிகள் தங்களுடைய வாழ்வாதார பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் அனைத்துக்கும் நாங்கள் செவிகொடுத்து இருக்கின்றோம்   
“எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில், தேர்தல் அறிக்கைகளில் சில விடயங்களை சுட்டிக்காட்டுவோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எங்களால் இயன்ற அனைத்து விடயங்களையும் செய்வோம்” என்றார்.   

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், “கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. கருணா என்பவர் யார் என்று விசேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X