2026 மே 12, செவ்வாய்க்கிழமை

பேருந்தில் மலர்ந்த காதல் : சக ஊழியர்களின் ‘யோகட் பார்ட்டி’

Janu   / 2026 மே 12 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருந்தில் சந்தித்த அழகான யுவதியால் ஈர்க்கப்பட்டு, இறுதியில் சக ஊழியர்களின் நகைச்சுவை நாடகத்தில் சிக்கித் தவித்த அலுவலக ஊழியர் ஒருவரைப் பற்றிய தகவல் அலுவலகமொன்றிலிருந்து அறியக்கிடைத்துள்ளது.

காதல் வலையில் விழுந்த தருணம்: அந்த வாலிபர் பார்ப்பதற்கு மிகவும் அழகானவர்; வசீகரமானவர். அவர் தனது சொந்த ஊரிலிருந்து கொழும்பிற்கு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட ரீ-சர்ட் (T-shirt) அணிந்திருந்தார். பேருந்தில் ஏறியவுடன், ஒரு அழகான யுவதி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகிலேயே அவர் அமர்ந்தார்.

இருவருக்கும் இடையே பார்வை பரிமாற்றங்கள் நிகழ்ந்து, புன்னகையில் ஆரம்பித்த உரையாடல் மெல்ல வளர்ந்தது. அந்த வாலிபர் அணிந்திருந்த ரீ-சர்ட்டை வைத்து அவர் பணிபுரியும் இடத்தை அந்த யுவதி சரியாகக் கண்டுபிடித்தார். இதனால் ஆச்சரியமடைந்த வாலிபர், தான் ஒரு முக்கியமான பொறுப்பில் இருப்பவர் எனக் காட்டிக்கொள்ளும் வகையில், தனது அலுவலக முகவரி அடங்கிய அட்டையை (Visiting Card) அந்த யுவதியிடம் வழங்கி தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

அலுவலகத்தில் பெருமை: மறுநாள் அலுவலகம் சென்ற வாலிபருக்கு, அந்த யுவதியை பற்றித் தனது நண்பர்களிடம் பெருமையாக கூறும் வரை நிம்மதி இருக்கவில்லை. அவரிடமிருந்து கடிதம் வரும் என்ற நம்பிக்கையில் நண்பர்களிடம் கதையளந்து கொண்டிருந்தார்.

அவர் எதிர்பார்த்தது போலவே, மூன்றே நாட்களில் அந்த யுவதியிடமிருந்து ஒரு கடிதம் அலுவலக முகவரிக்கு வந்தது. அழகான கையெழுத்தில், காதல் சொட்டும் வார்த்தைகளால் நிறைந்திருந்த அந்த கடிதத்தைக் கண்டதும் வாலிபர் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். அந்தக் கடிதத்தைத் தனது நண்பர்களிடம் காட்டிப் பெருமிதம் கொண்டதோடு, இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட நண்பர்களுக்கு 'யோகட் பார்ட்டி' (Yogurt Party) ஒன்றையும் வழங்கினார்.

வெளியான உண்மை: நண்பர்கள் அனைவரும் யோகட் சாப்பிட்டு முடித்த பின்னர், மெல்ல ஒரு கிசுகிசு பரவியது. அந்த வாலிபருக்கு வந்த கடிதத்திலிருந்த கையெழுத்தும், அந்த அலுவலகத்திற்குப் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் ஊழியரின் கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருப்பதை ஒரு நண்பர் சுட்டிக்காட்டினார்.

உண்மையில், அந்த வாலிபர் பேருந்தில் யுவதியிடம் வழிந்த கதையை அறிந்த சக நண்பர்கள், புதிய ஊழியரின் உதவியுடன் ஒரு போலி காதல் கடிதத்தைத் தயாரித்து வாலிபரை ஏமாற்றியுள்ளனர். இறுதியில், நண்பர்கள் விரித்த வலையில் சிக்கித் தனது பணத்தையும் செலவழித்த அந்த வாலிபர், தற்போது யாரிடமும் பேச முடியாமல் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .