2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மீதொட்டமுல்ல மக்களுக்கு இன்று முதல் வீடுகள்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 19 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கொலன்னாவை, மீதொட்டமுல்ல, குப்பைமலை சரிந்தமையால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, வீடுகளை முழுமையாக இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாளை (இன்று) முதல் ஆரம்பிக்குமாறு”, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.  

அனர்த்தத்துக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (19) முற்பகல் நடைபெற்றது.

இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை வழங்கியுள்ளார். 

அங்கு, இடர் வலையத்தில் உள்ள மக்களுக்கு முன்னுரிமையளித்து, அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளைப் பலப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.  

இலங்கை இராணுவத்தின் உதவியுடன் எதிர்வரும் சில மாதங்களில் அப்பிரதேசத்திலுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணித்த ஜனாதிபதி, சட்டவிரோதமாக அங்கு குடியேறுவதைத் தடைசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இதுவரையில் உதவி வந்த அனைத்து நிறுவனங்களினதும் உதவியை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, மீதொட்டமுல்ல அனர்த்தநிலை தொடர்பான அடுத்த முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம், எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X